மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, July 14, 2022

கண்ணம்மா என் காதலி _ வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு



கண்ணம்மா-என் காதலி

பாயு மொளி நீ யெனக்கு,
பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு,
தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை,
வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! 
சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு,
புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறும்  நின்றன் 
கண்ணிண் ஒளிவீசுதடீ

மாணுடைய பேரரசே! 
வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு 
வண்ண மயில் நானுனக்கு;

பானமடி நீ யெனக்கு,
பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி,
நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே!
ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு,
பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் 
எண்ணமில்லை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! 
கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,
விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு,
பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! 
நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே!கனியே!
அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,
காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,
வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே 
பொங்கி வருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! 
நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,
நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு,
சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே!
எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லைநிகர் புன்னகையாய்!
மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,
தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு,
வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் 
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய்ச் சமைந்தாய்!
உள்ளமுதமே! கண்ணம்மா!

கண்ணம்மா என் குலதெய்வம் - நின்னைச் சரணடைந்தேன் கண்ணம்மா


பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள்  தின்னத்தகாது என்று  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                   

மிடிமையும் அச்சமும் மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

தன்செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு 
நின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்     
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!                                      

துன்ப ம் இனியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!
நல்லது தீயது  நாம் அறியோம் அன்னை
நல்லது  நாட்டுக! தீமையை  ஓட்டுக! 
நின்னைச் சரணடைந்தேன்- கண்ணம்மா!
நின்னைச்  சரணடைந்தேன்!

Wednesday, July 13, 2022

கண்ணம்மா என் காதலி 1/6


மகாகவி பாரதி கண்ணனை காதலியாகக் கருதி எழுதிய ஆறு பாடல்களில் முதல் பாடல் இது.

சுட்டும் விழிச்சுடர் தான், – கண்ணம்மா!
சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி, – கண்ணம்மா!
வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப் – புடவை
பதித்த நல்வயிரம்
நட்ட நடு நிசியில் – தெரியும்
நட்சத்திரங்களடீ!

சோலை மலர் ஒளியோ – உனது
சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே – உனது
நெஞ்சில் அலைகளடீ!
கோலக் குயிலோசை – உனது
குரலினிமையடீ!
வாலைக் குமரியடீ, – கண்ணம்மா!
மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய், – கண்ணம்மா!
சாத்திரம்  ஏதுக்கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே, – கண்ணம்மா!
சாத்திர முண்டோடீ!
மூத்தவர் சம்மதியில் – வதுவை
முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோடீ? – இதுபார்,
கன்னத்து முத்த மொன்று


Saturday, July 09, 2022

தியாகத் திருநாள் ,ஈகைத் திருநாள் பக்ரீத் பெருநாள் வரலாறும் வாழ்த்தும்

பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் 

 ஈராக் நாட்டில் 4000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்தான் இறை தூதர் இப்ராஹீம் . அவருக்கு பல ஆண்டுகளாய் குழந்தை இல்லை . இறையருளால் அவரது இரண்டாவது மனைவி ஹாஜரா மூலம் அழகான ஆண் மகவு பிறந்தது . இஸ்மாயில் என்று பெயரிட்டு அக்குழந்தையை சீராட்டி பாராட்டி வளர்த்துவந்தனர். பால்ய பருவத்தை கடக்க தயாராகும் இஸ்மாயிலுக்கு அறநெறியூட்டி வளர்த்தனர் . அக்குழந்தையின் வழித்தோன்றல்களே இன்றைய அராபியர்கள் எனச் சொல்லப்படுகிறது . 

 அப்போது ஒரு நாள் இரவு இப்ராஹிமுக்கு வந்த கனவில் மகன் இஸ்மாயிலை பலிகொடுக்க வேண்டும் எனக் கடவுள் கட்டளையிட்டார் .நீண்டகாலம் தவமிருந்து பெற்ற பிள்ளையை எப்படி பலி தருவேன் என அவர் கலங்கவில்லை . இறைவனின் சித்தம் எதுவோ அதன்படியே நடப்பேன் என உறுதி பூண்டார் . மகன் இஸ்மாயிலை அழைத்து ஒப்புதல் கேட்டார் ., இறையாணையை நிறைவேற்ற எனக்கு தயக்கமில்லை . உங்கள் விருப்பமே எனது விருப்பம் என மகன் இஸ்மாயில் தெரிவித்தான். இறைவனுக்கு காணிக்கையாக இஸ்மாயிலை பலி தர இப்ராஹிம் பெருமகனார் வாளை ஓங்கினார் . அப்போது இறைவன் அனுப்பிய வானவர் ஜிப்ரயீல் இப்ராஹீம் ஓங்கிய வாளை தடுத்தார் . வானிலிருந்து கீழே ஒரு ஆடு இறங்கியது . இஸ்மாயிலுக்கு பதிலாக இறைவன் தருவித்து தந்த ஆட்டை பலியிடச் சொன்னார் அந்த வானவர் . இறைவனின் சோதனை மகிழ்ச்சியிலே முடிந்தது.

 இறைவன் ஆணையிட்டால் தனது செல்லப் பிள்ளையைக் கூட தயங்காத இப்ராஹீம் பெருமகனாரின் தியாகத்தை நினைவுகூரவே உலகெங்கும் உள்ள இஸ்லாமிய பெருமக்கள் இந்த நாளை தியாகத்தின் அடையாள தினமாக கொண்டாடுகின்றனர். அன்றைய தினத்தில் ஆடு மாடு ஒட்டகம் போன்றவை பலியிடப்படுகின்றன . அவற்றின் இறைச்சி மூன்றாக பங்கிடப்படுகின்றன . ஒரு பங்கு அண்டை வீட்டார்களுக்கும் , பிறிதொரு பங்கு ஏழை எளியவர்களுக்கும், மூன்றாவது பங்கை தங்களது சொந்த குடும்ப தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்கின்றனர் . அந்த தினத்தில் திறந்த பொது வெளியில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்படுகின்றன . 


 தியாகத் திருநாள், ஈகைப் பெருநாள் என பைந்தமிழில் அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமிய கலண்டரின்படி துல்ஹஜ் மாதத்தின் 10 ம் நன்னாளில் கொண்டாடப்படுகிறது .இஸ்லாமிய நண்பர்கள் அனைவருக்கும் எனது 
பக்ரீத் பெருநாள் வாழ்த்துக்கள் ....பி.சேர்முக பாண்டியன் , மதுரை

Friday, July 08, 2022

இன்று 08.07.2022 தோழர் டி ஞானையாவின் ஐந்தாவது நினைவு தினம் - ஞான தந்தையுன் வழி நடப்போம்

தோழர் டி ஞானையா அவர்கள் மறைந்து இன்றோடு ஐந்தாண்டுகள் முடிவுற்றது .தோழர் டி.ஞானையாவின் மறைந்த போது ( 08.07.2017 அன்று) அவரைப் பற்றி நான் எழுதிய எழுதிய சிறுகுறிப்பு கீழே தரப்பட்டுள்ளது 


செஞ்சுடர் அணைந்தது

NFPTE இயக்கத்தின் முன்னாள் மாபொதுச் செயலர் தோழர் டி ஞானையா இன்று ( 08.07.2017 )அதிகாலை 04.30 மணி அளவில் மறைந்தார் . அவருக்கு வயது 97. தமிழகத்தின் தலை சிறந்த மார்க்சிய சிந்தனையாளர்களுள் ஒருவராய் திகழ்ந்தார் . அவருக்கு ஒரே மகள் .கணவருடன் கொச்சியில் இருக்கிறார். அவரது பேத்திகள் இருவரும் அமெரிக்காவில் குடும்பத்துடன் இருந்து வருகின்றனர். .அவரது மனைவி 1993ல் மரணமடைந்தார்.

  அஞ்சல்துறை தந்த அரியதோர் முத்து. 

 தோழர் டி. ஞானையா 07.01.1921 ல் மதுரை திருமங்கலம் அருகிலுள்ள நடுக்கோட்டையில் பிறந்தார் .1941 அக்டோபரில் அஞ்சல் எழுத்தராக கரூரில் சேர்ந்தார் . .1942 முதல் 1946 வரை இராணுவ அஞ்சல் சேவையில் சேர்ந்து பர்மா லிபியா சைப்ரஸ் கராச்சி ஆகிய இடங்களில் பணியாற்றினார் . திருச்சியில் பணியாற்றிபோது தபால் தந்தி தொழிற்சங்கத்தில் தீவிரமாக் ஈடுபட ஆரம்பித்தார் . உதவிக் கோட்ட செயலரில் ஆரம்பித்து படிப்படியாக உயர்ந்து NFPTE செயலராக 1963 லும், NEPTE மாபொதுச் செயலராக ( Secretary General ) 1965 லும் தேர்ந்தெடுக்கப்பட்டார் .1965 முதல் 1960 வரையிலும் மற்றும் & 1976 முதல் 1978 வரையிலும் NEPTE யின் Secretary General ஆக இருந்தார் 

  ஒரு சிறந்த மார்க்சிய பேரறிஞர் 

 தமிழக அஞ்சல் துறை தமிழ் மண்ணுக்கு தந்த அறிவுஜீவிகளில் ஒருவர் இவர் . மார்க்சிய பேரறிஞர் ..சீன எல்லைப் பிரச்சனை ;பாகிஸ்தான் பிரிவினை ; சாதி ,மதம் , சமூக நீதி, மதவாத எதிர்ப்பு அரசியல் என பரந்து பட்ட எல்லையில்லா ஞானம் உள்ளவர். நல்லதோர் சமூக சிந்தனையாளர். அவருடன் உரையாடினால் அவரது உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ளும் . இடதுசாரிக் கட்சி தலைவர்களும் அபிமானிகளும் , மார்க்சிய சிந்தனையாளர்களும், சமூக ஆர்வலர்களும் பல் வேறு விசயங்கள் குறித்து விவாதிக்க எப்போதும் அவரைப் பார்க்க வந்த வண்ணம் இருப்பார்கள். . இடதுசாரி ஒற்றுமை பற்றி அதிக ஆர்வம் காட்டி வந்தார் .அவரது அபாரமான நினைவாற்றல் ஓர் அதிசயம் . பிரிட்டன், பிரான்ஸ் ,சோவியத் யூனியன் ஜெர்மனி, டென்மார்க்,ஹங்கேரி, பல்கேரியா அமெரிக்கா என பல நாடுகள் பயணித்தவர்.

  19.09.1968 மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நாயகன் .


NFPTE தபால் தந்தி தொழிற்சங்கத்தின் மா பொதுச் செயலராக பல ஆண்டு காலம் டில்லியில் இருந்தவர். இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மத்திய அரசை எதிர்த்து 19.09.1968 ல் நடந்த மத்திய அரசு ஊழியர்கள் ஒரு நாள் பொது வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தியதற்காக ஜெயில் சஸ்பென்சன் டிஸ்மிசல் என தண்டனை பெற்றவர். இதன் மூலம் NFPTE அமைப்புக்கு பெருமை சேர்த்தார், டில்லியில் இருந்தபோது 1975 ம் ஆண்டின் அவசர சட்டத்தின் கொடுமைகளை அனுபவித்தவர், தொழிற்சங்க பணிக்காக மூன்று முறை கைது , ஒரு முறை டிஸ்மிஸ் எமர்ஜென்சியின் போது Premature Retirement என பல தண்டனைகளுக்கு ஆளானாலும் ஒவ்வொரு முறையும் அவற்றை வென்று பணிநிறைவு செய்து ஒய்வு பெற்றார் . 

  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவாராக இயக்கப் பணி

பணி நிறைவுக்குப் பின்னர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் பணி செய்தார் . தமிழகத்தில் அவர் கால் படாத இடமில்லை , தொழிற்சங்க வகுப்பு எடுப்பதிலும் இயக்கங்களை வலுப் படுத்துவதிலும் தன் வாழ்நாள் முழுவதையும் பயன் படுத்தினார் . படிப்பும் எழுத்துமே என் பணி என வாளா இருந்து விடாமல் இயக்கப் பணிகளில் தம்மை அர்ப்பணித்துக் கொண்ட அவர் எல்லோருக்கும் முன்னுதாரணமாக விளங்கினார் . தன் வாழ்கையை முழுமையாக வாழ்ந்து முடித்தார் .தமிழிலும் ஆங்கிலத்திலும் முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை எழுதியுள்ளார் .

  அவரது நூல்களில் சில
 இஸ்லாமும் இந்தியாவும் , • விடுதலை வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகள் , • மதவாத அரசியல் இந்தியாவின் எதிர்காலம், • இந்திய சீன எல்லைத் தகராறு மறு ஆய்வும் தீர்வும், • பாகிஸ்தான் பிரிந்தது ஏன்?, • சர்வதேச பயங்கரவாதமும் இந்து பயங்கரவாதமும் • அமெரிக்க ஒபாமாக்களும் இந்தியாவின் தலித்துகளும் • சாதிமுறையை தகர்க்க முடியுமா • இந்துத்துவா பாசிசம் • வரலாற்றில் ஆர்வமூட்டும் ஆவணங்கள் • காய்தே ஆஸாம் முகமது அலி ஜின்னா – உண்மை சித்திரம் • நானும் ஓடினேன் • Glimpses of a Unique Union ( The Trade Union Movement of P&T Workers of India) • Islam and India • Terrorism sources and solutions • Obamas of America and Dalits of India இவை தவிர அவரசியல் விழிப்புணர்வூட்டும் சிறு பிரசுரங்கள் நிறைய எழுதியுள்ளார் .உலக கம்யூனிச வரலாறு குறித்து அவர் தற்போது எழுதி வந்த புத்தகம் முற்றுப் பெறவில்லை . ஒழுக்கம்,அன்பு,நேர்மையின் உருவாக கடைசி வரை வாழ்ந்தார். இறுதி மூச்சு நிற்கும் வரை மார்க்சிய நெறிமுறை களிலிருந்து சிறிதும் பிசகாமல் வாழ்ந்தார். அவரது மறைவு மத வாத சாதிவாத சக்திகளுக்கு எதிராக போராடிவரும் சமூக அக்கறை கொண்ட இயக்கங்களுக்கும் இடதுசாரிகளுக்கும் பேரிழப்பாகும் , அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் , தோழர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என் கண்ணீர் அஞ்சலியை காணிக்கை யாக்குகிறேன் 

. .... முகநூல் பதிவில் ப.சேர்முக பாண்டியன் முன்னாள் கோட்டச் செயலர் பி3 NFPE சிவகங்கை