மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, December 21, 2021

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி

 

17.02.20008 அன்று ஜனசக்தி நாளிதழில் வந்த எனது கட்டுரை இது . கிரிக்கெட் மீதான மோகமும் , நேர வீணடிப்பும் இன்றுவரை குறைந்த பாடில்லை . அது எப்போதும் போலவே இருக்கிறது .ஒரு நாள் ஆட்டம், டெஸ்ட் மேட்ச் என்றிருந்த கிரிக்கெட் இன்று பல வடிவங்களை பெற்றுள்ளது . இந்தியன் பிரிமியர் லீக் (Indian Premier League) என்ற IPL T20 ஆட்டங்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும் ரசிகர்களை கவர்ந்திழுக்க கொண்டுவரப்பட்டவையே . எனவே அன்றும் இன்றும் இக்கட்டுரை பொருத்தமானதாகவே உள்ளது

கிரிக்கெட் என்றொரு நேரந்தின்னி





கிரிக்கெட் ஏறத்தாழ 500 ஆண்டுகளுக்கு முன்புதான் பிரிட்டனில் தோன்றியது. பிரிட்டிஷ் பேரரசின் நுகத்தடியின் கீழிருந்த சில காலனியாதிக்க நாடுகளில்தான் அது பரவியுள்ளது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நம் நாட்டில் விட்டுச் சென்ற மிச்ச சொச்சத்தின் எச்சங்களில் ஒன்றுதான் கிரிக்கெட். நாம் அவர்களிடம் அடிமையாக இருந்ததின் மிகப்பெரிய அடையாளம் ஆங்கிலமும், கிரிக்கெட்டும்தான். ஆங்கில மோகம் படித்த இந்தியரை ஆட்டிப் படைக்கிறது. ஆனால் கிரிக்கெட் மோகம் படித்த, படிக்காத இந்தியர்கள் அனைவரையும் பிடித்திருக்கிறது. கிரிக்கெட் சீசனில் இப்பித்தம் தலைக்கேறி கிறுக்காக
அலையவிடுகிறது.

கேபிள் டிவியின் வரவிற்கு முன்னால் வானொலியில் மட்டும் கிரிக்கெட் வர்ணனை ஒலி பரப்பப்பட்டது. அப்போது அதைக்கேட்பவரின் நேரம் பெரிய அளவிற்கு வீண் போகவில்லை. கேபிள் டிவி மூலம் தொலைக்காட்சி ஒளிபரப்பு துவங்கப்பட்ட பின்னர்தான் பிரச்சனை ஆரம்பித்தது. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு சிறுவர் முதல் முதியவர் வரை அனைவருக்கும் கிரிக்கெட் போதையை ஊட்டுகிறது. கேமிராக்களின் புதிய புதிய தொழில்நுட்பங்கள், ஒளி பரப்பில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பரிமாணங்கள் போன்றவை கிரிக்கெட்டை நேரில் பார்ப்பதை விட நேரடி ஒளிபரப்பில், அதிக கிக்கை தருகின்றன. கிரிக்கெட் மைதானத்தில் பல கேமராக்களைக் கொண்டு பல்வேறு கோணங்களில் ஆட்டத்தைப் படம் பிடித்து உடனுக்குடன் எடிட் செய்து ஒளிபரப்பு செய்யப்படும் கிரிக்கெட் போட்டிகள் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கின்றன. கண்கள் கிரிக்கெட் காட்சியிலிருந்து விலகிடாவண்ணம் எல்லாவித மாயஜால சித்து வேலைகளையும் செய்கின்றனர். கிரிக்கெட் போட்டியை வழங்கும் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பொரேட் கம்பெனிகளின் சுண்டி இழுக்கும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் சராசரி கிரிக்கெட் ரசிகனை தொலைக்காட்சி முன் கட்டிப் போடுகின்றன.


இந்திய கிரிக்கெட் அணி வெற்றி பெற்றால் உண்டாகும் மகிழ்ச்சியை பீர் பாட்டில் உடைத்து மதுபானக் கடையில் கொண்டாடுகின்றனர். தோற்றுப் போனால் மனமுடைந்து போகின்றனர். குறிப்பாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும்போது இந்திய அணிக்கு அதீக ஆதரவு தெரிவித்துப் பேசுவது பாகிஸ்தான் அணியை ஆவேசமாக எதிர்த்துப் பேசுவது, இதன் மூலம் தனது தேசப்பற்றை வெளியுலகிற்கு பறைசாற்றிவிட்டதாய் புளகாங்கிதம் அடைந்து கொள்கின்றனர். கடைசி நிமிடபரபரப்பு ஆட்டத்தில் இந்திய அணி தோற்றுவிட்டால் படபடப்பாகி இதயத்துடிப்பை நிறுத்தி விட்டு மரணமடைந்தவர்களைப் பற்றிய செய்திகளையும் பத்திரிக்கைகளில் காண்கிறோம். இவையெல்லாம் கிரிக்கெட்டின் நேரடி ஒளிபரப்பால் உண்டான அவலங்கள்.

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் ஒளிபரப்பப்படும் போது முழு நாளையும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன்னே தொலைப்பவர்கள் நம் நாட்டில் அதிகம். கிரிக்கெட் என்றொரு நேரம் தின்னியின் கோரப்பசியால் நம் காலமும் நேரமும் வீணாகின்றன; கரைந்து காணாமல் போகின்றன. ஒரு தினப்போட்டி நாட்களில் படிப்பை மறந்து கிரிக்கெட் பார்க்கும் பள்ளி, கல்லூரி, மாணவர்களின் படிப்பு பாழாகிறது; அவர்களது பொன்னான நேரம் விரயமாகிறது . உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் நடைபெறும் சுகதுக்க காரியங்களுக்கு ஒருநாள் விடுப்பு எடுக்க பலமுறை யோசிக்கும் ஊழியர்கள், ஒரு தினக் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாராளமாக விடுப்பு எடுக்கும் விசித்திரத்தை கிரிக்கெட் அரங்கேற்றுகிறது. கிரிக்கெட்டால் லட்சக்கணக்கான மனித உழைப்பு நாட்கள் வீணாகின்றன.இது கவலைக்குரிய விஷயம்.




கிரிக்கெட்டிற்கு மட்டுமே அரசும், ஊடகங்களும் அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. நேரடி கிரிக்கெட் ஒளிபரப்பு மூலம் மக்களை தொலைக்காட்சிப்பெட்டி முன்னே முடக்கிப்போட்டு அதன்மூலம் கோடிக்கணக்கில் வாரி அள்ளுவது டிவி சேனல்களும், கார்ப்பரேட் கம்பெனிகளும், கிரிக்கெட் வீரர்களும்தான். (இதற்கு அரசியல்வாதிகள், ஆட்சியர்கள் ஆசீர்வாதம் உண்டு) இப்போதாவது கிரிக்கெட்டின் மோகவலையில் சிக்கி நேரத்தையும் காலத்தையும் தொலைக்கும் கோடிக்கணக் கானவர் மீட்கப்பட வேண்டும். கால்பந்து, ஹாக்கி, வாலிபால் உள்ளிட்ட பிற விளையாட்டுகளுக்கு உரிய முக்கியத்துவமும் அங்கீகாரமும் கிடைக்க செய்ய வேண்டும். இது அவசர அவசியப் பணியாகும்.

பள்ளிகளில் மாணவர்களை வெறும் மார்க் எடுக்கும் எந்திரங்களாய்க் கருதும் போக்கினை ஒழித்துக்கட்ட வேண்டும். பள்ளியில் படிக்கும்போதே மாணவர்களுக்கு விளையாட்டுகளில் அதிக ஆர்வத்தை உண்டாக்கி அவர்களை விளையாட்டு வீரர்களாய் உருவாக்குவதற்கான மாற்றுத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் முன்வைத்து அமல்படுத்த வேண்டும். இப்போதிருந்தே இதை ஆரம்பித்தால்தான் இன்னும் சில ஆண்டுகளிலாவது ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் வாய்ப்பை இந்தியா பெறும். இதற்கான பிரச்சாரத்தை விளையாட்டு குறித்த சிந்தனையுள்ளவர்களும் அறிவு ஜீவிகளும் மேற்கொள்ள வேண்டும்.

பி.சேர்முகப்பாண்டியன், மதுரை.

Saturday, December 11, 2021

மகாகவி பாரதியின்139 வது பிறந்த நாள் - வையத் தலைமை கொள்

 


  வையத் தலைமை கொள்


பாரதியின் பிறந்த நாள் 11.12.1882.  இன்று (11.12.2021) பாரதிக்கு 139 வது பிறந்த நாள்.

மகாகவி பாரதியின்  புதிய ஆத்திசூடி தந்த அற்புதமான வரி தான் "வையத் தலைமை கொள்" இது.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை ஈர்க்கும் வரி. சிந்தக்க வைக்கும் வரி. 

அவ்வையின் ஆத்திசூடியை ஆரம்ப வகுப்புகளில் படித்திருப்போம்..  அதில் தையல் சொல் கேளேல் என்கிறார். அதாவது பெண்களின் சொற்களைக் கேட்டு அதன்படி நடக்காதே என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் தோன்றாத காலம் அது . பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம். எனவே அது அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. 

ஆனால் மகாகவி பாரதி நவீனக் கவிஞர்; புதுமைக் கவிஞர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் என்று வாழ்வோம் இந்த நாட்டிலே என்று உரத்தகுரலில் ஒலித்தவன் . எனவே தனது புதிய ஆத்திசூடியில் தையலை உயர்வு செய் என்கிறான். காலத்துக்கு  ஒவ்வாத கருத்துக்களை புறந்தள்ளியவன் பாரதி. "வேதம்" மாற்றவே முடியாதது, மாற்றினால் அதன் புனிதம் கெட்டுவிடும்  என்று மற்றவர்கள் எண்ணிக்கொண்டு  இருந்த போது  வேதம் புதுமைசெய் என்று சொன்னவன் அல்லவா அவன். கோபம் கூடாது என்றும்;  அது தன்னழிவை உண்டாக்கும் என்று காலம்காலமாய்  சொல்லிவரும் தமிழ்  சமூகத்தை நோக்கி ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் பாரதி. 

எனவே தற்கால சூழலுக்கு ஏற்ப  புதிய ஆத்திசூடியில் பாரதி எழுதிய வரியே" வையத் தலைமை கொள். வையம் என்றால் உலகம் என்று பெருள் .இவ்வுலகை தலைமை ஏற்று நடத்து என்கிறான் பாரதி. உலகம் என்பது  எல்லைக் கோடுகளால் தேசங்கள் என்ற பெயரில்  பலவாக பிரிந்து கிடக்கிறது.  பல்வேறு ஆட்சிமுறைகளை கடைப்பிடிக்கக்கூடிய நாடுகளின் தொகுப்பாக உள்ள இவ்வுலகிற்கு  ஒற்றைத் தலைமை சாத்தியமா என்று கேள்வி வருகிறது.

இப்படி ஒரு கேள்வி எழும் தெரியாமலா வையத் தலைமை கொள்' என்கிறான்?  பாரதி மிகவும் நுட்பமான கவிஞன். பலமொழிகள் அறிந்தவன். பன்முகத்தன்மை கொண்ட மகாகவி. எனவே நேரடியான அர்த்தத்தோடு மட்டுமின்றி  புதுமையான கோணத்தில்  பல்வேறு அர்த்தங்கள் தருகிற மாதிரி என்று சொல்கிறான். 

ஒருவர் எங்கிருந்தாலும் குறைந்தபட்சம்   அவரை சுற்றி உள்ளவர்களின்  நலம் பேணி அவர்களை மிகச் சரியான திசையில்  வழிநடத்திச் செல்ல வேண்டும் .அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த உலகம் உண்டு. அதை அவர்களே உருவாக்கி கொள்கின்றனர். அதில்  வாழ்கின்றனர்  .அந்த உலகிற்கு அவர்களே  தலைமை ஏற்றும் நடத்த விரும்புகின்றனர். பணிசெய்யும்  இடமே ஒருவருக்கு உலகாக இருக்கும். அந்த இடத்தில் எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக அங்கு அவர் இருக்கவேண்டும்.

 இதுபோலவே ஒருவர் தான் செய்துவரும்  தொழிலில், பணியாற்றும் இடத்தில்,விரும்பி செயலாற்றும் அரங்கில், அரசியல் தளத்தில்;  வாழுகின்ற ஊரில்,பகுதியில்  எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக விளங்க வேண்டும் என்பதையே பாரதி சொல்கிறான். 

தலைமை ஏற்று நடத்த முதலில் தேவையானவை எவை தெரியுமா? பிறருக்கு உதவும் நல்ல மனம். எல்லோரையும் சமமாக நடத்துதல்;  தனது நலத்தை விட பிறரது நலனில் அக்கறை காட்டுதல் போன்றவையே . தனது விநாயகர் நான்கு மணிமாலை என்ற பக்தி பாடலில்  ஒரு தலைவனின் கடமை குறித்து பட்டியலிடுகிறான் மகாகவி பாரதி.

கடமையாவன; தன்னைக் கட்டுதல் 

பிறர்துயர் தீர்த்தல்; பிறர் நலம் வேண்டுதல்.

மேலும் ஒருதலைவன் தப்படி இருக்க வேண்டும்  என்பதை

 யாருக்கும் எளியனாய், 

யாருக்கும் வலியனாய், 

யாருக்கும் அன்பனாய் 

யாருக்கும் இனியனாய்

இருக்க வேண்டும் என்கிறான்.

 ஒருதலைவன் எளியவனாக இருக்கவேண்டும், தன்னை சார்ந்தவர்களுக்கு ஒரு கொடுமை நடக்கும் போது தட்டிக் கேட்கும் வீரனாகவும் எல்லோரிடமும் ஒரேமாதிரியான   அன்பு கொண்டவனாகவும்  இன்சொல் பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும் என்பதையே தனது பாடலில் குறிப்பிடுகிறார் .

மகாகவியின் புதிய ஆத்திசூடியை படித்து அதன்படி நடந்தால் தலைமை கொள்ளும் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். எங்கு இருந்தாலும் தனக்கென  ஒருதனித்துவம் மிக்க ஒரு இடத்தை உண்டாக்கி  தலைநிமிர்ந்து வாழலாம்.

 எண்ணங்களே வாழ்க்கை, நல்ல எண்ணங்கள் உயர்வு தரும்.. தீய எண்ணங்கள் தாழ்வை உண்டாக்கும். இதையே புதிய ஆத்திசூடியில் எண்ணுவது உயர்வு என்கிறான் பாரதி.

தன்னைச் சார்ந்த பிறருக்கு கொடுமை ஒன்று நடக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா  இராதே; நிமிர்ந்து நின்று தோளுயர்த்தி போராடு எதிர்த்து கேள் என்பதை 

"குன்றென நிமிர்ந்து நில்"

 "கொடுமையை எதிர்த்து நில்" 

என்கிறான் பாரதி

அதுபோலவே  புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் . புத்தகவாசிப்பு உள்ளவர்கள்;  எதிலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்களே ஏற்புடைய தலைமை பண்பு கொண்ட தலைவராக ஆகமுடியும் என்பதை

"நுனியளவு செல்"

 "நூலினைப் பகுத்துணர்"

என்கிறான் மகாகவி பாரதி.

வையத்தலைமை கொள் என்று மட்டும் செல்லாமல் அதனை அடைய நல்லதொரு வழிகாட்டியாகவும் பாதி இருக்கிறான். எனவே பாரதியின் கவிதைகளைப் படிப்போம்;தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வோம்

பாரதியின்  புதிய ஆதிசூடியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவோம். தலைமைப் பண்புகள் கொண்டவர்கள் நிறைந்த தமிழ் சமூகத்தை உருவாக்க நம்மாலான பணி இது.


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த அனைத்தும் அறிந்து 

வளர் மொழி வாழியவே!..


வாழிய நற்றமிழ்; 

வாழிய நற்றமிழர்;

வாழிய பாரதி

Wednesday, November 03, 2021

“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகில் வாராது வந்த மாமணி - சினிமா விமர்சனம்

 

*“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகில் வாராது வந்த மாமணி*

ஜோதிகா & சூர்யா தயாரிப்பில்  அமேசான் பிரைம் OTT  யில் வெளியான ஜெய் பீம்வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை நேற்று பார்த்தேன்.  

பழங்குடி மக்களான இருளர் சமூகத்தை சார்த்த  இளைஞர்கள் மூவர் ஒரு பணக்காரர் வீட்டில் நகை திருடியதாகக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர் .  விசாரணை என்ற பெயரில்    அவர்களை  லாக்கப்பில் அடைத்து குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு  கடுமையாக     சித்திரவதை  செய்து வந்த  போலீஸ் அவர்கள்  மூவரும் லாக்கப்பிலிருந்து ஒரு நாள் இரவில்  தப்பி விட்டதாக சொல்கிறது.. அதில் ஒருவன் ராசாக்கண்ணு . அவன மனைவி செங்கேணி  .தவறு ஏதும் செய்யாத தனது அப்பாவிக் கணவனைத்   தேடி அலைகிறாள் .  லாக்கப்பிலிருந்து தப்பி ஓடியதற்காக எல்லா சாட்சியங்களும் ஆவணங்களும்   கனகச்சிதமாக  போலீசால் ஜோடிக்கப்பட்டிருந்ததால்  எந்த ஒரு வழக்கறிஞரும் இந்த கேசில் தலையிட வழக்காட முன்வரவில்லை . செங்கேணி  அறிவொளி இயக்கம்  மூலம் தங்களுக்கு பாடம் எடுத்த  ஒரு தோழியரின் வழிகாட்டலில்   கம்யூனிஸ்ட் இயக்க தோழர்களின் உதவியால்   சென்னையில்  உள்ள வக்கீல் சந்துருவை சந்திக்கின்றனர் . கேசின் உண்மை தன்மையை உணர்ந்து கொண்ட சந்துரு காணாமல் போன இளைஞர்களை கண்டுபிடிக்க    செங்கேணி மூலம் சென்னை உயர் நீதி மன்றத்தில்  ஹேபியஸ் கார்பஸ் பெட்டிஷன்  ( ஆள் கொணர்வு மனு ) கொடுக்கிறார் . ராசாக்கண்ணுவும் அவர்களது நண்பர்களும் என்ன ஆனார்கள் என்பதை அழுத்தமான  திரைமொழியில்  சொல்கிறது இப்படம் .

சென்னை உயர்நீதி மன்றத்தில்  1990 களில்  நடைபெற்ற  கேசின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் இது.  பொதுவாக உண்மை சம்பவத்தின் மீது நடந்த கோர்ட் கேஸை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்கள்  . வெகுஜனங்களை கவராத  ஆவணப்படங்கள்  போலவே இருக்கும் . ஆனால் இந்தப்படம் முதலிலிருந்து கடைசி வரை விறுவிறுப்பு குறையாத த்ரில்லர் படம் போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது . இதை ஒரு லீகல் த்ரில்லர் ( Legal Thriller ) என்று கூடச்  சொல்லலாம்.

 

தண்டனை முடித்து  ஜெயிலில் இருந்து வெளிவரும்  கைதிகளை ஜாதி ரீதியாகப் பிரித்து தாழ்த்தப்பட்டவர்கள் ,பழங்குடியினர் மீது மட்டும்  பொய்க்  கேஸ் போடுகிற    காவல்துறையின்   ஜாதிய பாகுபாட்டை   காட்சிப்படுத்துவதன் மூலம் படம் துவங்கிறது .இயற்கையோடு  இசைந்து  நேர்மையாக வாழும் இருளர் சமூகம்   பொது சமூகத்தால் தீண்டத்தகாதவர்களாக , திருடர்களாகவே  பார்க்கப்படுகிறது. அரசும் அரசு இயந்திரங்களும் காவல்துறையும் அவர்களை மனிதர்களாகவே பார்ப்பதில்லை . தற்காத்துக்கொள்ள இயலாத,  நாதியற்ற, ஒடுக்கப்பட்ட இருளர் சமூகத்தில்  இருந்து  வந்த ஒரு பெண்  தனது கணவனை  கண்டுப்பிடிக்க  வேண்டி நீதியின் நெடுங்கதவுகளை  தட்டித் திறக்கவைக்கிறாள் . அதற்கு துணையாக வக்கீல் சந்துரு இருக்கிறார்.

பள்ளி விழாவில் கலந்து கொண்ட சந்துரு  குழந்தைகள் எல்லா தேசியத் தலைவர்கள் வேடம் பூண்டு வருவதை கண்டு அம்பேத்கார் மட்டும் இல்லையே என்கிறார் . பொது சமூகத்தை நோக்கி வீசும் கேள்வி  இது .   சமூக நீதி பற்றி சிந்திக்க தூண்டும் இம்மாதிரியான வசனங்கள் அங்காங்கே வருகின்றன.

இந்த படத்தில்  திரைக்கதைதான்   நாயகன் நாயகன் எல்லாமே . செங்கேணியாக நடித்த   லிஜோமோல் ஜோஸ்   பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் . படம் முழுக்க வந்து செல்கிறார்  அவருக்கு  இந்த ஆண்டின் சிறந்த நடிகை தரப்படவில்லை என்றால் விருதுக்கான அர்த்தத்தை அது இழந்துவிடும் . மணிகண்டன் என்ற நடிகர் ராசாக்கண்ணாக  நடித்திருக்கிறார் . இருளர் இனத்து இளைஞனின் இயல்பான அன்பை மகிழ்ச்சியை, போலிசால் படும்  துயரத்தை, வலியை கண்முன்னே நிறுத்துகிறார் . சந்துருவாக வரும் சூரியா  அப்பாத்திரத்திற்கு  முழுதாக பொருந்தியிருக்கிறார் . போலிஸ் அதிகாரி நம்பெருமாள்சாமியாக வரும் பிரகாஷ்ராஜ்  உள்ளிட்ட அனைவரும் தங்களது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் .போலீஸாக நடித்திருப்பவர்கள் கனவிலும் வந்து நம்மை மிரட்டுகிறார்கள் .  

இப்படி ஒரு புதிய  கதைக்களத்தை தேர்வு செய்து  அதை உயிர்த்துடிப்பான திரைக்காவியமாக மாற்றிய பெருமை இயக்குனர் டி.ஜே ஞானவேலுவையே  சாரும் . அவருக்கு  பாராட்டுக்கள் .வெகுஜன ஊடகமான தமிழ் சினிமாவில் எந்த ஒரு கமர்சியல் தன்மை ( காதல் , சண்டை குத்துப்பாட்டு போன்ற ஆட்டம் பாட்டம் என்ற மசாலாத்தன்மை )   இல்லாமல் , வலிய திணிக்கப்பட்டகாமெடி ஏதுமில்லாமல் ஒரு படத்தை வெற்றிகரமாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ஞானவேல். முதல் படத்தின் மூலம்  தமிழ் திரை உலகில்  ஒரு முன்னணி இயக்குனராக ஆகியிருக்கிறார் . அவரின் அடுத்த படம் குறித்த ரசிகர்களின்  எதிர்பார்ப்பு அவருக்கு பாரமாகவே இருக்கும் .. அதிலிருந்து மீண்டு இன்னும் சிறந்த பல தமிழ் படங்களை தரவேண்டும் என அவரை வாழ்த்துவோம். இதை துணிச்சலோடு தயாரித்த தம்பதியர் நடிகர்கள் ஜோதிகா- சூரியா பாராட்டுக்குரியவர்கள்

சீன் ரோல்டன் இசையில் எல்லாப் பாடல்களும் அருமை. குறிப்பாக ராஜு முருகன் எழுதிய “தலை கோதும் இளங்காத்து சேதி கொண்டு வரும்”  பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும் ரகம் . படத்தோடு சேர்ந்து பயணிக்க கதிரின் ஒளிப்பதிவும் துணை செய்கிறது, ஒவ்வொரு காட்சியையும்  மேருகேற்றுகிறது. 

“ஜெய் பீம்” தமிழ் சினிமா உலகத்தை வேறு ஒரு தளத்திற்கு உயர்த்திய படம், மொத்தத்தில் கொண்டாடப்பட வேண்டிய தமிழ் சினிமா இது .

Saturday, October 09, 2021

பாபு தாராபாதா முகர்ஜி 9.10.1921 அன்று லாகூரில் ஆற்றிய ஆங்கில உரையின் தமிழாக்கம்

*பாபு தாராபாதா முகர்ஜி  9.10.1921 அன்று லாகூரில் ஆற்றிய  ஆங்கில உரையின் தமிழாக்கம்*


1. "அகில இந்திய (பர்மா உட்பட) அஞ்சல், ஆர்.எம். எஸ். ஊழியர் சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய மாநாட்டிற்கு என்னைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த பெருமைக்கும், அன்பிற்கும் நான் பெரிதும் கடமைப் பட்டுள்ளேன். இத்தகைய மதிப்பு நிறைந்த ஒரு மாநாட்டின் தலைமைப் பதவியை ஏற்று நடத்தும் தகுதியும். திறமையும் எனக்கில்லை. என்னுடைய குறைபாடுகளை நான் அறிவேன். இந்தியா, பர்மா எங்கணும் இருந்து வந்து குழுமியுள்ள சங்கப் பிரதிநிதிகள் ஒன்றுகூடி முக்கியமான பல தீர்மானங்களையும், திட்டங்களையும் விவாதிக்க, செயல்படுத்த வந்திருக்கின்றீர்கள். உங்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாக செயல்பட முடியுமா என்று அஞ்சுகின்றேன். என்னுடைய கடமை மிகப் பெரிது. என்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரின் ஒத்துழைப்பை நாடுகின்றேன். உங்களுடைய அன்பாலும், கட்டுப்பாடான நடத்தையாலும் இந்த மாநாட்டை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்க வேண்டிய எனது கடமை எளிதாயிற்று. சென்ற ஆண்டில் பிரபல அரசியல் தலைவரும், அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். ஊழியர்களின் சிறந்த. நண்பனுமான உயர்திரு. கப்பர்டா நமது முதல் மாநாட்டிற்குத் தலைமை தாங்கினார். அவர் எல்வளவு 'வெற்றிகரமாக மாநாட்டை நடத்தினார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

2. 'அத்தகைய பெரும் பொறுப்பை எனக்குக் கொடுத்திருக்கின்றீர்கள். ஆனால் தலைவராக என்னைத் தேர்ந்தெடுத்ததிலும் ஒரு முக்கியத்துவம் இருப்பதை உணர்கின்றேன். என்னுயை வாழ்க்கையின் பெரும் பகுதியை ஒரு எளிய கீழ்மட்ட அஞ்சலக ஊழியனாகக் கழித்துள்ளேன். என்னுடைய வாழ்வின் பெரும் பகுதியும், துயர் மிக்க வாழ்க்கையாகவே கழிந்தது. இத்தனை ஆண்டுகள் சேவை செய்த பின்னரும் இன்னும் துன்பத்தில் உழல்கின்றேன். என்னைத் தேர்ந்தெடுத்ததின் மூலம் தொழிற் சங்கத்தின் உண்மைத் தத்துவத்தை உணர்த்துகின்றீர்கள். தன்னுடைய தோழர்களுக்காக, சகோதரர்களுக்கு தொழிற்சங்கத்தில் உழைத்த குற்றத்திற்காக, அதிகார வர்க்கத்தால் கொடுமைப்படுத்தப்படும் எனக்கு நீங்கள் பேராதரவு தருகின்றீர்கள் என்பதையும், என்னுடைய தலைமையை ஏற்றுக்கொள்ள நீங்கள் தயங்கவில்லை என்பதையும் இந்தத் தேர்வு அறிவிக்கின்றது. அஞ்சல் துறை முதல்வர் சட்டவிரோதமாக என்னை இந்தியாவிலிருந்து பர்மாவிற்கு மாற்றவும், துன்புறுத்தவும் முயன்றாலும் நீங்கள் என்னைப் பெருமைப்படுத்தி வந்தீர்கள். உங்கள் சகோதரர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டு என்பதையும், பிறருடைய தயவின்றி உங்கள் பிரச்சினைகளை நீங்களே உங்கள் சக்தி கொண்டு தீர்க்க முடியும் என்பதையும் உலகிற்கு அறிவிக்கவே என்னை இந்த மாநாட்டுத் தலைவராகத் தேர்ந்தெடுத்திருக்கின்றீர்கள்.


3. “இந்த மாநாட்டில் என்னால் கலந்துகொள்ள இயலாது” என்று எண்ணினேன். கல்கத்தாவில் கடுமையான நோயால் அவதியுறும் எனது மனைவி, மரணப்படுக்கையில் இருக்கின்றார். மரணத்தின் வாயிலில் நிற்கும் என் மனைவியை விட்டுவிட்டு இங்கு வர இயலாது என்று அஞ்சினேன். என்றாலும் நீங்கள் எனக்களித்த மகத்தான பெருமையையும், நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வீணாக்க நான் விரும்பவில்லை. எனவே உங்கள்
அழைப்பை உவகையுடன் ஏற்றுக்கொண்டேன். என்னுடைய மனைவியும் இதற்கு சம்மதித்தாள். 


4. “இந்திய நாட்டின் எல்லைக் காவலனாக என்றென்றும் பஞ்சாப் விளங்கி வந்துள்ளது.நாடு வாழ்வதற்கான போராட்டங்கள் அனைத்திலும் முன்னணியில்: நிற்க, முதற்பலியாக பஞ்சாப் நின்றுள்ளது. அஞ்சல், ஆர்.எம்.எஸ் ஊழியர்கள் இன்றுள்ள பொருளாதாரமற்ற அடிமைத்தனங்களை உடைத்தெறியவும், விடுதலை பெறவும் நம்முடைய பஞ்சாப் தோழர்கள் பெரும் பங்கேற்க இன்று முன்வந்துள்ளார்கள். ஐந்து நதிகள் பாயும் செழிப்பான இந்த ஜீவபூமியில் நடக்கும் இந்த மாநாடு நிச்சயம் வெற்றி பெறும். முதல் இரண்டு அகில இந்திய மாநாடுகளையும் நடத்திக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள நமது பஞ்சாப் தோழர்களின் உறுதியையும், துணிவையும் பாராட்டுகின்றோம்.


5. "சென்ற மாநாட்டிற்கும் இந்த மாநாட்டிற்கும் இடையே நடந்த நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்”. பெரிதும் விளம்பரப் படுத்தப்பட்ட அஞ்சல் விசாரணைக் குழுவின் முடிவு வெளியாயிற்று, அவர்கள் முடிவு எவ்வளவு பாதகமானவை, மோசமானவை, அபத்தமானவை, உழைப்பின் மதிப்பை துச்சமாக மதிப்பவை என்பது தெளிவாகி விட்டது. இந்தக் குழுவின் பயங்கரமான சிபாரிசுகள் எவ்வளவு மோசமானவை என்பதை நீங்களே உணர்வீர்கள். உங்களில் பலர் அதன் கொடுமைக்கும் ஆளாகியிருக்கின்றீர்கள்.

6. "சலுகைகள் எல்லாம்தானங்கள் போன்றவை.என்ன தானம் கொடுப்பதென்பதும், எவ்வளவு கொடுப்பதென்பதும் கொடுப்பவர் முடிவு செய்யவேண்டியவை. இரப்போருக்கு அதைப் பற்றிப் பேச உரிமை இல்லை” என்ற முன்னுரையுடன் தனது சிபாரிசுகளை துவக்கியுள்ளது இந்தக் குழு. அரசாங்கத்தை தானம் வழங்குபவராகவும், தொழிலாளர்களைப் பிச்சைக்காரர்களாகவும், கிடைக்கின்ற பிச்சையோடு நாம் திருப்தி அடைய வேண்டுமென்றும், இந்தக் குழு கூறுகின்றது. என்ன அவமானம்! என்ன கேவலம்!! என்னைப் போலவே உங்களுக்கும் ஆச்சரியம்! பொறுப்பு வாய்ந்த மனிதர்களைக் கொண்ட குழு; ஒரு நாகரீக அரசாங்கத்தால் இந்த 20-ம் நூற்றாண்டிலே நியமிக்கப்பட்ட ஒரு குழு; எப்படி இவ்வளவு சிறுமையான முடிவெடுத்தது? அரசியல் விவகாரங்களில் கூட நேரடி நடவடிக்கையில் ஈடுபடும் அளவு வர்க்க உணர்வு பெற்றுவிட்ட தொழிலாளர்கள் பெருகிவரும் இந்த நேரத்தில், தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்று இகழவும் துணிவு இருக்கின்றது. ஆண்டாண்டு காலமாக துன்பத்தாலும், அவமானத்தாலும் அவதியுற்றாலும் நாம் அமைதி காத்து வந்தோமே, அந்தக் குற்றத்திற்குத்தான் இன்று பிச்சைக்காரர் பட்டம் கிடைத்திருக்கின்றது. தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் போன்ற நிலையில்தான் இன்னும் அஞ்சலகங்களில் இருக்கின்றார்கள் என்பதை நாம் உணர்வதற்காகத்தான் நம்மைப் பிச்சைக்காரர்கள் என்று அழைத்தார்களோ! அரசாங்கம் போடுகின்ற எந்தப் பிச்சையையும் நாம் முணுமுணுப்பின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்துடன் திருப்தி அடைய வேண்டும். மேலும் வேண்டும் என்று சத்தம் போடுவதில் பயனில்லை என்று இந்தக் குழு கூறு கின்றது,

7. "சகோதரர்களே, தொழிலாளர்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. உலகில் செல்வத்தை படைக்கும் ஒரே சக்தி தொழிலாளர் சக்தி. உழைப்பின்றி, வேலை செய்யாத உலுத்தர்கள், பிறர் உழைப்பைத் திருடுபவர்கள், உறிஞ்சுபவர்கள் சமுதாயத்தின் இரத்தத்தைக் குடித்து கொழுப்பவர்கள், செல்வத்தைப் படைக்கும் தொழிலாளர்களைப் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள். என்ன வேடிக்கை பார்த்தீர்களா? தொழிலாளியின் உழைப்பால் கிடைக்கும் செல்வத்தை அபகரித்துக் கொண்டு, தொழிலாளிக்கு பிச்சைக் காசுகளை கூலியாகக் கொடுப்பதும், தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்பதும் என்ன நியாயம்? அந்தப் பிச்சைக் காசும் கூட தொழிலாளியின் உயிர் உடலில் ஒட்டி இருக்கவேண்டும் என்பதற்காகவும், மறுநாள் மீண்டும் அவன் மற்றவர்களுக்காக உழைத்து செல்வத்தை உற்பத்தி பண்ணவேண்டும் என்பதற்காகவும் கொடுக்கப்படுகின்றது.


8."தோழர்களே, தொழிலாளி உழைப்பை மறுத்தால் இந்த உலகம் என்ன ஆகும் என்று எண்ணிப் பாருங்கள். ஒரு மணி தானியம் விளையாது, ஒருமுழத் துணியும் நெய்யப்படாது; செங்கல்லும் இடம் பெயராது; ஒரு குடிசையும் கட்டப்படமாட்டாது அந்தப் பருத்துக் கொழுத்து ஆடம்பர உடையணிந்து செல்வத்தில் புரளும் உருவங்கள், தங்களுடைய வர்க்கத்தின் கீழ்த்தரமான குணங்களை பகட்டாகக் காட்டுபவர்கள், பசிக்கு உணவின்றியும், உடலைமூடத் துணியின்றியும். தங்கவீடின்றியும் தவிப்பர். தொழிலாளர்களை பிச்சைக்காரர்கள் என்று அழைக்க அவர்கள் இருக்கமாட்டார்கள், தோழர்களே, இந்த மாயையை உதறித்தள்ளுங்கள். உறக்கத்தில் இருந்து விழித்தெழுங்கள். உங்களை உணருங்கள். உங்களது உண்மை மதிப்பு என்னவென்று நினையுங்கள். உங்கள் சக்தியை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் இலட்சியத்தை நோக்கி விரைந்து நடைபோடுங்கள், உங்கள் உள்ளம் உறுதியுடன் இருந்தால் ஆண்டவனும் உங்களுக்குத் துணை இருப்பார்.




9. "சகோதரர்களே, இந்த விசாரணைக் குழுவிடமிருந்து நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? அதன் அங்கத்தினர்கள் உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல. உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள், உங்கள் குறைகளை எடுத்துரைக்கக் கூடியவர்கள் என்று யார், யாரை நம்பினீர்களோ, அவர்களை எல்லாம் -உங்கள் சங்கங்கள் குறிப்பிட்டவர்களை எல்லாம்-இந்தக் குழுவில் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் பிடிவாதமாய் மறுத்தது. நீங்கள் தேர்ந்தெடுக்காத, உங்களால் விரும்பப்படாத, உங்கள் நம்பிக்கையைப் பெறாத அங்கத்தினர்களைக் கொண்ட ஒரு குழுவின் முடிவு, உங்களைக் கட்டுப்படுத்தாது. உங்களைப் பற்றி அந்த விசாரணைக் குழு கவலைப்படவில்லை. நீங்களும் அந்தக் குழுவைப் பொருட்படுத்தக்கூடாது 


10.."உங்களுடைய ஆலோசனைகளையும், சாட்சியங்களையும் பயனற்றவை, முரண்பாடானவை, நம்பத்தகாதவை என்று கூறி இந்தக் குழு நிராகரித்தது. ஆனால் அரசாங்கம் கொடுத்த வேறு பல அறிக்கைகளை, பல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்கள் கொடுத்த திட்டங்களை மட்டும் சீர்தூக்கி பார்த்தது. அவற்றிலும்கூட உயர்ந்த சம்பள விகிதங்களை சிபாரிசு செய்த சில போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்களின் கருத்தைப் புறக்கணித்தது. குறைந்த ஊதியம் சிபாரிசு செய்த போஸ்ட்மாஸ்டர் ஜெனரல்களின் கருத்தை ஏற்றுக்கொண்டது. இந்தக் குழுவின் நோக்கம் ஒன்றுதான். பணச் செலவு கூடாது. என்பதே அது. இந்தக் குழுவின் முடிவுகள் எல்லாம் அந்த ஒரே அடிப்படையில்தான் எடுக்கப்பட்டுள்ளது.


11. "பெரிய அதிகாரிகளின் ஊதியம் பற்றி சிபாரிசுகள் செய்யும்பொழுது இந்த சிக்கனம் காற்றோடு போயிற்று”. ஆயிரக்கணக்கில் ஊதியம் வாங்கும் சிலருக்கு சென்ற ஆண்டில் குறைந்தது இருமுறை சம்பளம் உயர்த்தப்பட்டது  ஊதியம் வாங்கும் சிவருக்கு சென்ற பட்டது. ஆனால் குறைந்த சம்பளம் பெறும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பற்றி கவலைப்படவில்லை. கூடுதல் சம்பளம் வேண்டுமென்ற நமது கோரிக்கைகள் நம்பத்தகாதவை. பொறுப்பற்றவை. செலவு மிக்கவை என்றெல்லாம் கூறி நிராகரித்தனர். வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றும் குமாஸ்தாக்களுடனும் வேலை ஆட்களுடனும் நம்மை ஒப்பிட்டிருக்கிறது அரசாங்கம், நமது குடும்பம் வாழ்வதற்கு தேவையான ஊதியம் பற்றி இந்தக்குழு கவலைப்படவில்லை.யாரோடு ஒப்பிடுவது? யார்யாருக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது? அரசாங்கம் கொள்கை வகுத்து அதனை மற்றவர்கள் பின்பற்றுவதா? அல்லது கொள்ளையடிக்கும் முதலாளிகள் காட்டும் வழியை அரசாங்கம் கொள்கையாக பின்பற்றுவதா? இன்றைய உலகில் நாம் வாழ்க்கை நடத்துவதற்கு தேவையான ஊதியம் வழங்குவதை மறுத்து அதனை. நியாயப்படுத்த போலிச் சமாதானங்களும், வேண்டாத வாதங்களும் கூறப்படுகின்றன.


12.“இங்கிலாந்து நாட்டுத் தொழிலாளர்களுக்கு யுத்த காலத்திற்கு முன்பு கிடைத்த சம்பள விகிதத்தையும் விலைவாசி உயர்வால் இன்று அவர்களுக்கு வழங்கப் பட்டுள்ள ஊதிய உயர்வையும் நாம் ஒப்பிட்டுப் பார்த்தால் பிரிட்டிஷ் அஞ்சலக சகோதரர்களுக்கும். நமக்கும் எத்தகைய மாறுபாடான, நேர்விரோதமான நியாயம் வழங்கப்படுகின்றது என்பது தெளிவாகும். 18 வயதுள்ள ஆங்கில நாட்டுத் தபால்காரருக்கு வேலை நியமனத்தின் போது வாரம் 20 ஷில்லிங்குகள் வாரச் சம்பளமாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று 53 ஷில்லிங்குகள் வாரச் சம்பளமாகப் பெறுகின்றார்கள். இதில் இரண்டு உண்மைகள் வெட்ட வெளிச்சமாக விளங்குகின்றது. ஒன்று, பிரிட்டிஷ் தபால்காரரின் சம்பளம் ரூ.175 என்பது. மற்றது யுத்தகாலத்திற்கு முன்பிருந்ததை போன்று 160 சதம் அதிக சம்பளம் பெறுகின்றார்கள் என்பது .இந்தியாவில் அஞ்சலக எழுத்தர்களுக்கு 25 வருட சேவைக்குப் பிறகு கிடைக்கக்கூடிய மிக அதிக சம்பளம் ரூ.120 முதல் 140 வரை மட்டுமே. இதற்கிடையில் இருமுறை அவர்களது திறமையின் தகுதி (Efficiency Bar) கடுமையாக சோதிக்கப்படுகிறது. அவர்களது சம்பளம் ரூ. 35 முதல் 50 வரை. இங்கிலாந்தில் ரூ.175 சம்பளம் வாங்கும் தபால்காரருடன் உங்கள் நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். என்ன மகத்தான அதிர்ஷ்டம் உங்களுடையது! உங்களில் பலருக்கு பெயரளவிற்குத் தான் உயர்வு கிடைத்தது. சிலருக்குப் பாதகமும் நேர்ந்தது.


13. "இங்கிலாந்தில் தபால்காரருக்கு மட்டும்தான் சம்பளம் உயர்ந்ததென்பதல்ல. மற்றவர்களுக்கும் அப்படியே. சம்பள உயர்வுக்கான கூடுதல் செலவை, அஞ்சல் கட்டணங்களை உயர்த்தி ஆங்கில நாட்டு அஞ்சல் நிர்வாகம் சமாளித்துள்ளது. நம்முடைய நாட்டு நிலை என்ன? ஒவ்வொரு ஆண்டும் அஞ்சல் துறையின் அதிகப்படி வருவாய் பொது நிதிக்குச் சேருகின்றது.  சென்ற 8 ஆண்டுகளில் மட்டும் அஞ்சல் துறை 8 கோடி ரூபாய் பொது நிதிக்குக் கொடுத்துள்ளது. கிழக்கிந்திய கம்பெனியின் காலத்திலிருந்து அஞ்சல் துறையின் மூலமாக லாபம் சம்பாதிக்கும் நோக்கம் கிடையாது என்று உறுதிமொழி கூறினார்கள். ஒவ்வொரு ஆண்டும் அப்படி லாபம் சம்பாதிப்பது எதைக் காட்டுகின்றது? உறுதி மொழியைக் காப்பாற்றுகின்ற லட்சணம் இதுதானா?


14. 'ஆண்டாண்டு காலமாக அமைதியாகப் பொறுமையுடன் செயலற்றுக் கிடந்த குற்றத்திற்காக நாம் இவ்வளவு கேவலமாக நடத்தப்படுகின்றோம். இதற்கு நாமே பொறுப்பு. நாம் உரிமைக்காகப் போராடாமல் இருந்ததால், நம்முடைய குறைகள் கேட்கப்படவில்லை. நாம் இன்னும் சற்று சத்தம் போட்டிருந்தால் அரசாங்கம் நமக்கு இத்தகைய அநீதி இழைத்திருக்காது. பழைய அனுபவங்களிலிருந்து நாம் பாடம் பெற்றுக் கொள்ள வேண்டும் . நாம் மனிதர்களாக வாழவேண்டுமென்றால் நல்லதொரு வாழ்க்கை வாழவேண்டுமென்றால் தொடர்ந்து போராடத்தான் வேண்டும்.


15. "தோழர்களே, இன்று நம் முன்னுள்ள பிரச்சினை உணவுப் பிரச்சினை. நியாயமான வாழ்க்கை வாழ்வது பற்றிய பிரச்சினை. நாம் வாழ்வதற்குத் தேவையான ஊதியம் பெறுகின்றோமா? நம்முடைய குழந்தைகளுக்குத் தேவையான உணவும், உடையும், கல்வியும், இருக்க இடமும், மருத்துவ வசதியும், எதிர் காலத்திற்கான ஏற்பாடுகளும் செய்ய நமது முதுமை காலத்திற்கு ஏதேனும் சேமிக்க முடிகின்றதா? நாம் வாழவில்லை. எப்படியோ காலத்தைக் கடத்துகின்றோம். நாட்களைத் தள்ளுகின்றோம். இந்த வாழ்க்கை வாழ சம்மதிக்கின்றீர்களா?


16. "மனிதன் மிருகமல்ல. உடலின் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்யும் மிருகவாழ்க்கையில் மனிதன் திருப்தி கொள்ள முடியாது. அவனுடைய உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டால் உள்ளத்து இயற்கை புரட்சி செய்யும். மனிதன் உயர்ந்த லட்சியங்களுக்காக வாழவேண்டும். மனிதத் தன்மையையும், மனிதாபிமானத்தையும் வளர்க்க வேண்டும். உலகையும், உலகைத்தோற்றுவித்த ஆண்டவனையும் உணரவும், புரிந்து கொள்ளவும் வேண்டும். கவலைகளில் இருந்து மனிதன் விடுபடாதவரை உயர்ந்த நோக்கங்கள், லட்சியங்கள் பற்றி சிந்திக்க இயலாது. ஒரு மனிதனின் வருவாய், அவனது குடும்பக் கவலைகளில் இருந்து விடுதலை அளிக்கும் வகையில், உள்ளத்தை உயர்ந்த லட்சியங்களில் செலுத்த வாய்ப்பளிக்கும் படியாகவும் இருக்கவேண்டும்.


17. ''ஆனால் அஞ்சல் இலாகாவில் பணி புரியும் நமது வாழ்வு எப்படி உள்ளது? மிகக் குறைந்த ஊதியம். மீளாத கவலை. கடுமையான, நீண்ட நேர, களைப்புற வைக்கும் உழைப்பு. மிருக வாழ்க்கை போன்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். இந்த நிலை நீடிக்க நாம் அனுமதிக்க முடியாது. அது இயற்கைக்கு விரோதம். எனவே வேலை நேரத்தைக் குறைக்க, ஊதியத்தை உயர்த்த நாம் உறுதிகொள்ள வேண்டும். தொடர்ந்து ஓய்வில்லாது மீண்டும், மீண்டும் நாம் போராடினால்தான் நமது வாழ்க்கை வாழத் தக்கதாக அமையும். மனிதன் மிருகமாக வாழ்வதா? அல்லது கடலினும் பெரிய துன்பங்கள் நேர்ந்தாலும் அவற்றை எதிர்த்துப் போராடி, மனிதர்களாக வாழ்வதா? என்பதை இந்த மாநாட்டில் முடிவு செய்யவேண்டும்.


18. "நமது கேவலமான வாழ்க்கைக்கு நாமே காரணம். நம்முடைய தகுதிக்குத் தக்கவாறுதான் நமக்கு பலன் கிடைக்கும். உயர்ந்த நிலையிலிருந்து நாம் தாழ்வடைந்து விட்டோம். நம்மை நாமே மறந்துவிட்டோம். நமக்கு உள்ளம் இருக்கின்றது என்பதையும் ஆண்டவனின் தத்துவம் அதுதான் என்பதையும் மறந்து விட்டோம். நம்மைச் சூழ்ந்துள்ள மாயையை விலக்கினால், கேவலமான அச்சத்தையும், சுயநலத்தையும், விதியின் பெயரால் தாழ்ந்துகிடக்கும் செயலின்மையையும் வெற்றி கொண்டோமென்றால், நமது உள்ளம் உண்மை வெற்றியில் பூரிப்படையும். என்ன தடை எதிர் நின்றாலும் அதனை உடைத்தெறியும்.


19. "இந்த அஞ்சல் குழுவினிடமிருந்து நீங்கள் பெரிதும் எதிர்பார்த்தீர்கள். 
உங்களுக்கு நன்மை செய்யவேண்டுமென்று அரசாங்கம் விரும்புவதாக
எண்ணினீர்கள்.  உங்கள் நம்பிக்கை பாழானது. முந்தைய நிலையில் எந்த
முன்னேற்றத்தையும் இந்தக் குழு உங்களுக்கு வகுத்துத் தரவில்லை. ஏமாற்றத்தால் நீங்கள் செயலிழந்து இருக்கப் போகின்றீர்களா? அல்லது 'உங்கள் சக்தி அனைத்தையும் திரட்டி, ஓய்வின்றிப் போராடி உங்கள் நியாயமான கோரிக்கைகளை அரசாங்கத்திடமிருந்து பெறப் போகின்றீர்களா?


20.“அஞ்சல் குழுவின் முடிவுகள் திருப்தியற்றவை. அவமானகரமானவை, நீங்கள் கேவலமாக நடத்தப்பட்டிருக்கிறீர்கள்” என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்கள் நிலையை உயர்த்த வேண்டுமென்பதில்  உறுதியாகயிருந்தால் உங்கள் முன் ஒரே ஒரு வழிதான் உள்ளது. ஒன்றுபடுங்கள். நியாயமான ஊதியம் பெறவேண்டுமானால் ஒன்றுபடுங்கள்; வேலைநேரம் குறையவேண்டுமானால் ஒன்றுபடுங்கள்; நிர்வாகத்திலுள்ள உயர் அதிகாரிகள் உங்களை மதிக்க வேண்டுமானால் ஒன்றுபடுங்கள்.

21. ''அஞ்சல் விசாரணைக் குழுவின் தலைவர் திரு.ஹசல்டைன் தான்  தந்தி விசாரணைக் குழுவிற்கும் தலைவராயிருந்தார். தந்தி ஊழியர் சங்கத்தின் செயலாளர் திரு ஹென்றி பார்ட்டன் முன்வைத்த கோரிக்கைகளில் பெரும்பாலும் தந்தி விசாரணைக் குழுவால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தந்தி ஊழியர்களை பிச்சைக்காரர்கள் என்றோ அவர்களது சாட்சியங்கள் தகாதவை என்றோ சொல்லவில்லை. ஆனால் அதே  தலைவரைக் கொண்ட அஞ்சல் விசாரணைக்குழு நம்மை பிச்சைக்காரர்கள் என்றும், நமது சாட்சியங்கள் நம்பத்தகாதவை என்றும் கூறினால் அதற்கு காரணமென்ன? நம்முடைய சங்கம் தந்தி ஊழியர் சங்கத்தைப் போன்று பலம் வாய்ந்தல்ல; நமக்குள்  ஒற்றுமையில்லை; நம்மைத் துச்சமாக மதிக்க முடியும் என்பதே.



22. தோழர்களே, வேண்டுகோள்களும், கருணை மனுக்களும், விண்ணப்பங்களும், பயனளிக்காது. உங்களது. சக்தியை அரசாங்கத்துக்கு உணர்த்தும் வகையில், நீங்கள் ஒன்றுதிரள வேண்டும். நமது சங்கம், சரியான முறையில் செயல்பட்டால், தந்தி ஊழியர் சங்கத்தைவிட பன் மடங்கு சக்தி உடையவர்களாக இருப்போம். சில தடைகள் இருக்கின்றன. நாம் நாடெங்கும் சிதறிக் கிடக்கின்றோம். சங்கம் சீர்பட்டால் நமது பலம் பெருகும். நாடெங்கும் உள்ள அஞ்சல் ஊழியரிடையே சங்க உணர்வு பெருகி வருகின்றது. ஒவ்வொருவரும் பொது நன்மைக்காகத் தங்களால் இயன்றவற்றை செய்ய முன்வருகின்றனர். செழுமையான, வளம் நிறைந்த பூமி நம் முன்னேயுள்ளது. இந்த நிலத்தில் விதைத்து பெரும் பலன் அடைய துணிவு நிறைந்த ஊழியர்கள் சிலர் வேண்டும்.


23. "சக்தியுடன் செயல்பட சங்கம் ஒன்றுபட்டதாய் இருக்க வேண்டும்; தொடர்பின்றி அங்கொன்றும் இங்கொன்றுமாக சங்கங்கள் பரந்து கிடப்பதால் பயனில்லை. அவற்றின் சக்தியற்ற தன்மையை அதிகாரிகளும் அறிவார்கள். ஒரு மத்திய சங்கத்தின் கீழ் நாம் ஒன்றுபடாவிட்டால் நம்முடைய முயற்சிகளில் வெற்றி பெற முடியாது. இதை அகில இந்திய அஞ்சல், ஆர்.எம்.எஸ். சங்கம் நிறைவேற்ற வேண்டும். அகில இந்திய சங்கம் உண்மையான வலிமை பெற வேண்டு மென்றால் நம்மிடையே உள்ள குறுகிய மனப்பான்மையையும், மாநில மனப்போக்கையும் விட்டு விட வேண்டும். பரந்த நோக்கமும், நம்பிக்கையும் கொண்டு அகில இந்திய சங்கத்தையும் நமது ஒன்றிணைப்பையும் உறுதி செய்ய வேண்டும் . வர்க்க உணர்வு வேண்டும். நாம் சங்கத்திற்காக இருக்கின்றோம்; சங்கம் நமக்காக இருக்கின்றது என்று நாம் உணர வேண்டும்.


25.  "நம்முடைய சங்கம் பலம் வாய்ந்ததாக விளங்க சில அடிப்படைகள் தேவை. வங்க மாநில மாநாட்டில் நான் விரிவாக குறிப்பிட்டவாறு அந்த அடிப்படைகள் வர்க்க உணர்வு, சங்க உணர்வு, போதுமான நிதிநிலை, பிரச்சாரம், சட்ட சபையில் பிரதிநிதித்துவம், கட்டுப்பாடு என்பவையே.

"இவ்வளவு கேவலமான முடிவுகளை தந்ததற்காக அஞ்சல் விசாரணைக் குழுவும் அதனை அமைத்து முடிவுகளை ஏற்றுக் கொண்ட அரசாங்கமும் வெட்கப்பட வேண்டும். நாம் இந்த குழுவின் முடிவுகளை நிராகரிக்கின்றோம். அரசாங்கமும் அதனை நிராகரிப்பதுதான் கௌரவம். இனி நாம் செய்ய வேண்டியது என்ன? நான்கு முக்கிய கடமைகள் நம்முன் உள்ளன. அஞ்சலக ஊழியர்களுக்கு நியாயமான ஊதியத்தைப் பெறுவது, வேலை நேரத்தை குறைப்பது, மேலதிகாரிகளின் நடத்தையில் மாற்றங்காண்பது, நிர்வாகத்தில் நமது குரல் மதிக்கப்படச் செய்வது என்பவையே.

"சென்ற மாநாட்டில் எழுத்தர்களுக்கும், அஞ்சல் பிரிப்பவர்களுக்கும் ஒரே சம்பள விகிதம் வேண்டும் என்று கேட்டோம். அந்த தீர்மானத்தின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. வாழ்க்கைக்கு போதுமான சம்பளம் வழங்காதபோது, திறமையின் தகுதியை சோதிப்பது என்ற பெயரால் ஊதிய உயர்வுக்குத் தடை விதிப்பது முறையற்றது. உயர்ந்த பதவிகளில் வாழ்க்கைத் தேவையின் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படுவதில்லை. நிர்வாகத் திறமை மிக்கவர்களும், உயர் தகுதிகள் உடையவர்களும், உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர். அந்தப் பதவிகளுக்கு கௌரவம் கொடுக்க திறமைத் தகுதியைச் சோதிப்பது நல்லது.


"இன்றுள்ள நிலையில் அஞ்சல் ஊழியர்கள் 10-12 மணி நேரம் வேலை செய்கன்றனர். பொறுப்பு மிகுதி . கடுமையான உழைப்பு. பணப் பொறுப்பு வேறு. அதிகாரிகள் வேலை இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதேயில்லை. நேரத்தைக் குறைப்பது மட்டுமின்றி  வேலைப் பளுவைக் கண்டறிய உள்ள அளவீடுகளையும் மாற்றி அமைக்கவேண்டும்,

"அஞ்சல் இலாகாவில் கீழ்மட்ட ஊழியர்களுக்கு அதிகாரிகள் வழங்கும் தண்டனை முக்கியப் பிரச்சினையாக உள்ளது. அஞ்சல் அதிகாரிகள் ஊழியர்களை பொதுப்பணி ஊழியர்களாக (Public Servant) அல்லாமல் அடிமைகளாகத்தான் (Public Slaves) நடத்துகின்றனர். சுறுசுறுப்பாக இயங்கும் ஒரு அஞ்சலகத்திற்குள் நுழைந்து பார்த்தோமென்றால் ஊழியர்களை அதிகாரிகள் எவ்வாறு விரட்டுகின்றனர்; மிரட்டுகின்றனர் என்பதைப் பார்க்கலாம். எங்கே வேலை போய்விடுமோ என்ற அச்சத்தால் ஊழியர்கள் வாய்திறவாது அடங்கிக் கிடக்கின்றனர். இலாகாவில் ஊழியர்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

"ஊழியர்களை அச்சுறுத்தியே அஞ்சல் இலாகாவில் நிர்வாகம் நடைபெறுகின்றது. அதிகாரிகள் வெளியிடும் உத்தரவுகளும், குறிப்புகளும் அச்சுறுத்துபவையாய் உள்ளன. உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், குறை இருந்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று ஒவ்வொரு முறையும் ஊழியர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஊழியர்களின் நாணயம், கடமையுணர்ச்சி இவற்றை இலாகா மதிப்பதேயில்லை. தண்டனைகளால்தான் நடப்பதாக எண்ணுகின்றனர்.  அடிமை சந்தை நடத்துபவர்களைப் போன்று வேலை நடப்பதற்காக கையில்  கோலேந்திக்கொண்டு இருக்கின்றது நிர்வாகம். மனிதர்களின் நாணயத்தைக் கெடுக்க இதை விட வேறென்னவேண்டும்? மனிதனுக்கு நல்ல குணங்கள் உண்டு என்பதையே அதிகாரிகள் நம்புவதில்லை. அவர்கள் எண்ணப்படி, ஆண்டவன் மனிதனைப் படைக்கவில்லை, சாத்தான்தான் மனிதனைப் படைத்தான். எனவே: கோல்கொண்டு அச்சுறுத்தினாலன்றி வேலை நடக்காது என்று எண்ணுகின்றனர்.

ஒரு கடிதத்தை தவறுதலாக அனுப்பிவிட்டீர்களா? அபராதம் கட்டவேண்டும். வேலைமிகுதியால் சற்று கவனக் குறைவாக நடந்துவிட்டீர்களா? தண்டிக்கப்பட வேண்டும். சிறு சிறு குற்றங்களுக்கும் தண்டனை, அபராதம்,பதவிக் குறைப்பு. திறமைத் தகுதி (Efficiency Ear) தேர்வைக் கடந்து நீங்கள் அப்பால் செல்ல முடியாது. செலக்ஷன் கிரேட் (Selection grade) பதவி உயர்வு பற்றி கனவு காண முடியாது. இலாகாவின் சட்ட திட்டங்கள் அனைத்தையும் நாம் கரைத்து குடித்திருக்கவேண்டும் என்றும் அஞ்சல்துறை தலைவர் விரும்புகின்றார். இது யாராலும் நடவாத காரியம்.

"சகோதரர்களே, நமது குறைகளை நிர்வாகம் கவனிக்க வேண்டுமென்றால் நம்முடைய குரல் அங்கு ஒலிக்க வேண்டும். அதுவரை நமது நிலையில் முன்னேற்றம் ஏற்படாது. முன் யோசனையின்றி பல திட்டங்களை நிர்வாகம் கொண்டு வருவதும், அதன் விளைவால் ஏற்படும் பல துன்பங்களை நாம் அனுபவிப்பதும், பின்னர் அத்திட்டங்கள் கைவிடப்படுவதும், மாற்றப்படுவதும் நீங்கள் அறிந்ததே. முன் யோசனையற்ற திட்டங்களால் வீண் செலவும், ஊழியர்களுக்கு எண்ணற்ற தொல்லைகளும் ஏற்படுகின்றன. ஊழியர்  சங்கங்களின் கருத்துக்கு நிரவாகம் மதிப்பளித்தால் இத்தகைய தொல்லைகளும் செலவும் ஏற்படாது. நம்மை, நமது அகில இந்திய (பர்மா உட்பட ) அஞ்சல், ஆர்.எம். எஸ். ஊழியர் சங்கத்தை நிர்வாகம் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்று கேட்க நமக்கு உரிமை உண்டு.

நம்  துன்பங்கள் எல்லையற்றவை. அவற்றில் ஓரளவு மட்டுமே நான் கூறியுள்ளேன். நீண்டநேரம் பொறுமையை சோதித்து விட்டேன். மேலும் பேசி உங்கள் பொறுமையை சோதிக்க விரும்பவில்லை.

"முடிவில் ஒன்றுமட்டும் கூற விரும்புகின்றேன். நீங்கள் மனிதர்கள். வாயற்ற கால்நடைகளல்ல. உங்களுக்கு உள்ளம் இருக்கின்றது. அதுவே ஆண்டவன் இருப்பிடம். உங்கள் தவறு, அறியாமை, சோம்பல் இவை தவிர வேறு எவற்றாலும் அந்தசக்தியை அடக்க முடியாது. விண்ணையும், மண்ணையும் மாற்றவல்ல. மகத்தான சக்தி உங்களிடத்தில் உள்ளது. இந்த சக்தியை செயல்படுத்தங்கள். உறுதியுடனும், தெளிந்த நோக்குடனும் ஒன்றுபடுங்கள். வெற்றி உங்களை நாடி ஓடிவரும்.

"இந்த மாநாட்டின் நினைவுகளை மட்டும் நீங்கள் எடுத்துச் சென்றால் போதாது. இந்தக் கொள்கைகளுக்காக அயராது பாடுபட வேண்டும். நாடெங்கும் உள்ள ஊழியர்களை ஒன்றுபடுத்துங்கள். அடுத்த ஆண்டு நாம் சென்னையில் கூடும்பொழுது, துச்சமாக நம்மை நிர்வாகம் மதிக்கமுடியாது என்பதை எடுத்துக் காட்டுவோம். நமது சங்க அங்கீகாரம் பற்றி ஒரு வார்த்தை. அங்கீகாரம் தருவதற்கு அரசு விதிக்கும் நிபந்தனைகள் இழிவானவை. நீங்கள அவற்றை ஏற்றுக் கொண்டால் உங்கள் சங்கத்தின் சுயேச்சையும் உரிமையும் பறிபோகும். சங்கம் வலிமை பெற்றால் அங்கீகாரம் கிடைப்பது உறுதி. அரசாங்கம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அங்கீகாரம் கொடுத்துத் தான் ஆகவேண்டும். சங்கத்தை பலப்படுத்துங்கள். அங்கீகாரத்தைத் தேடி ஓடாதீர்கள். அதுதானே வரும்.

"முடிவாக இந்தமாநாட்டின் வெற்றிக்கு காரணமாய் இருந்த பாவா தேஜா சிங், திரு.சுவாபெர்ரி, தொண்டர்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் மீண்டும் நன்றி கூறி முடிக்கின்றேன். வணக்கம்.''

Friday, October 01, 2021

Free download of Mahakavi Bharathiyar poems ,Songs, stories and Katturaikal ( Tamil articles) in -PDF, EPUB, MOBI Formats -- மகாகவி பாரதியார் கவிதைகள் , கதைகள் & கட்டுரைகள் -PDF, EPUB, MOBI Formats களில்- இலவச பதிவிறக்கம் செய்ய

 Mahakavi Bharathiyar  Poems Songs , Stories and  Tamil articles   in PDF, Epub, Mobi Formats - Free download 


மகாகவி பாரதியார் கவிதைகள் , கதைகள் & கட்டுரைகள் -in PDF, Epub, Mobi Formats-  இலவச பதிவிறக்கம் செய்ய


மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் in PDF

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in PDF

மகாகவி பாரதியார் கதைகள் in PDF


மகாகவி பாரதியார் கவிதைகள் முழுதும் in epub format

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in epub format

மகாகவி பாரதியார் கதைகள் in epub format



மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் in Mobi format

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in MOBI format

மகாகவி பாரதியார் கதைகள் in Mobi format


Mahakavi Bharathiyar  Poems- complete collection  in PDF Format-  For Free download - Click the link below

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் in PDF

Mahakavi Bharathiyar  Poems- complete collection  in  EPUB  Format-  For Free download - Click the link below

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுதும் in epub format

Mahakavi Bharathiyar  Poems - complete collection  in  MOBI Format-  For Free download - Click the link below

மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் in Mobi format

Mahakavi Bharathiyar  Stories   in PDF Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கதைகள் in PDF

Mahakavi Bharathiyar  Stories   in EPUB Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கதைகள் in epub format

Mahakavi Bharathiyar  Stories   in MOBI  Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கதைகள் in Mobi format

Mahakavi Bharathiyar Katturaukal   (Tamil articles )  in PDF Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in PDF

Mahakavi Bharathiyar Katturaukal   (Tamil articles )  in EPUB Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in epub format

Mahakavi Bharathiyar Katturaukal   (Tamil articles )  in MOBI Format - Free download - Click the link below

மகாகவி பாரதியார் கட்டுரைகள் in MOBI format




Saturday, September 11, 2021

என்னுள் நுழைந்த பாரதி -மாற்றமும் ஏற்றமும் தந்தவன்

                                        என்னுள் நுழைந்த பாரதியின் வயது 39

மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் (11.09.2021)

இன்று (11.09.2021) மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு நாள் . பாரதி மறைவு நாள் செப்டெம்பர் 12,1921 என விக்கிப்பீடியா மட்டுமின்றி பல புத்தகங்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தாலும்  , பாரதியாரின் நெருங்கிய நண்பர் வ.ரா என்று அழைக்கப்பட்ட வ.ராமசாமி  பாரதியாரின் வாழ்க்கை வரலாறு என்ற நூலில் பாரதி செப்டெம்பர் 11,1921ல் மறைந்ததாகவே எழுதுகிறார். எனவே 11.09.1921 ஐ மகாகவி மறைந்த நாளாக எடுத்துக்கொள்வதே சரி.

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம் 11.12.1882.  எனவே  1982 ல் பாரதியின் நூறாவது பிறந்தநாள் கொண்டாட்டம் தமிழகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்று வந்தது. அப்போது எம் .ஜி ஆர் தலைமையிலான அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது .பாரதியின் கவிதை நூல்கள் மலிவு விலையில் பிரசுரம் செய்யப்பட்டு தமிழகம் எங்கும் கிடைத்துவந்தன.  அந்த நேரம்  கடலாடி என்ற ஊரில் பணியாற்றி வந்தேன். ஆங்கில தினசரிகள்,  நாவல்கள் படிப்பதை  மட்டுமே பொழுது போக்காய் வைத்திருந்தேன். தெரியாத வார்த்தைகளே ஆங்கிலத்தில் இல்லை என்கிற போட்டி எனக்கும்  நண்பர் ஒருவருக்கிடையே இருக்கும். அதற்காகவே படித்த நான் வேறொன்றும் அறியாதவனாகவே இருந்தேன் என்பதே உண்மை.

 என் நண்பன் ஹரிதாஸ் பாரதி நூற்றாண்டு பிறந்த  தினத்தன்று (11.12.1982)  பாரதியின் கவிதை தொகுப்பை எனக்கு அன்பளிப்பாய் தந்து *பாரதியை படி; அது உனக்குள் ஒரு வெளிச்சத்தை பரப்பும்*  என்று சொன்னான். அவன் சொன்னதன் அர்த்தம் அப்போது பிடிபடவில்லை. பாரதியின் கவிதைகளை படிக்க படிக்க  அவனது  வரிகளில் உள்ள ஈர்ப்பை என்னால் விரைவில் உணர முடிந்தது. என்னுள் அவன் நுழைந்து கொண்டான். என்னுள் ஏற்பட்ட சிந்தனை மாற்றத்தை என்னால் உணர முடிந்தது. எனக்கு பாரதியை அறிமுகப்படுத்திய நண்பன் ஹரிதாஸ் வங்கி ஒன்றில்  அதிகாரியாக பணியாற்றியபோது சாலை விபத்தில் மரணமடைந்தது என் சோகமே. பாரதியை படிக்கும் போதும் அவனைப்பற்றி சிந்திக்கும் போதும்  ஹரிதாஸ் பற்றிய நினைவு வரும் எனக்கு.


பாரதியே எனக்கு   தமிழ் மீது  ஒரு வித ரசனையை பற்றை பிடிப்பைத் தந்தான். புத்தகங்களை  வாசிக்கும் நேசிக்கும் நண்பர்கள் மூலம் சிறந்த தமிழ் நூல்களை கண்டடைந்து வாசிக்க ஆரம்பித்தது பாரதியை படித்த பின்னால் தான்.

 மதுரையை சொந்த ஊராக கொண்ட வங்கி ஊழியர்கள் விடுமுறையில்  மதுரைக்கு  சென்று  வாடகை நூலகம் மூலம் வாங்கி வந்து எனக்கு தந்த ஆங்கில , தமிழ் நாவல்கள் குப்பையே என்பதை அப்போது தான் உணர முடிந்தது.


அன்று என்னுள் நுழைந்த பாரதிக்கு இன்றைய வயது 39. பாரதி இந்த பூமியில் வாழ்ந்த காலமும்  39 ஆண்டுகளே. பாரதி மறைந்து இன்றோடு நூறாண்டுகள் முடிந்தாலும்   என்னைப்போன்ற இலட்சோப லட்சம் தமிழர்களின் உள்ளங்களில் அவன் தனது  கவிதைகள் மூலம் சிம்மாசனம் போட்டு  அமர்ந்திருக்கிறான். தரணி உள்ளவரை தமிழ் இருக்கும் . தமிழ் இருக்கும் வரை தமிழர்கள் உள்ளங்களில் பாரதி  தனது கவிதைகள் மூலம் வாழ்ந்து கொண்டே இருப்பான்.

தமிழ்த்தாய் தந்த அருந்தவ புதல்வன் பாரதி. அவன் மரணமில்லா மாமனிதன் .என்னுள் மாற்றமும் சிந்தனையில் ஏற்றமும் தந்த  பாரதியின் புகழ் ஓங்குக.
 

"அன்பினைக் கைக்கொள்ளடா
இதை அவனிக்கிங்கு ஓதிடடா
துன்பம் இனி இல்லை
உன் துயரங்கள் ஒழிந்ததடா"
...மகாகவி பாரதி 

மானுட அறத்தில் சிறந்தது பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டுவதே. பாரதி காட்டும் வழியில்  அன்பினைக் கைக்கொள்வோம். நம்மை பீடிக்கும் துன்ப துயரங்களை விரட்டுவோம். 


பி.சேர்முக பாண்டியன்
@மதுரை 

Friday, July 09, 2021

எனக்குப் பிடித்த தேவதேவன் கவிதை -


                 வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்

மரம் அழைக்கிறது.

மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்

தோழர்களாகிறார்கள்.

----- தேவதேவன் கவிதையிலிருந்து 



தேவதேவன் கவிதை 

 

Thursday, June 10, 2021

மௌனமே மொழியான கவிஞன் நஸ்ருல் இஸ்லாம்(24.05.1899 --29.08.1976) -

  மௌனமே மொழியான கவிஞன் நஸ்ருல் இஸ்லாம்(24.05.1899 --29.08.1976)


. மே 2009 ல் ஜனசக்தியில் .வெளிவந்த என்னுடைய இந்த கட்டுரை இது -பி.சேர்முக பாண்டியன், மதுரை


NAZRUL ISLAM 

மாணவப் பருவத்தில் நண்பர்களோடு நஸ்ருல் விளையாடிக் கொண்டிருந்தான். எல்லோரும் அங்கும் இங்கும்
தாவிக்குதித்து விளையாடும் போது குருவிக் கூடு ஒன்று கலைந்து போனது. குஞ்சுகள் சிதறி ஓடின. நஸ்ருலின் கவனத்தை அவை ஈர்த்தன. கூட்டை நோக்கி அவன் ஓடினான். கூட்டைச் சரி செய்தான். குஞ்சுகளை அக்கூட்டில் பத்திரமாகச் சேர்த்தான். பெரு மூச்சோடு திரும்பினான். வேறு இடம் சென்று மீண்டும் விளையாடினான். இந்த நிகழ்வுதான், 'சடுமா பாக்கிர் சானா (குருவிக் குஞ்சு) என்ற கவிதையாக பிற்காலத்தில் அவனிடமிருந்து உருவானது.


அப்போது அவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனது தந்தை அகால மரணமடைந்தார். குடும்பம் நிர்கதிக்கு ஆளானது. 'துரதிருஷ்டப் பையன் (தூக்குமியா) எனப் பலரும் அவனுக்குப் பட்டப் பெயர் சூட்டி அழைத்தனர். பள்ளி வாசலில் முஜ்கினாகச் சேர்ந்தான் நஸ்ருல். அவனது பணி தொழுகைக்கு அழைப்பதுதான். அவனது படிப்பு தடைப்பட்டது. ஆனால் அவனுள் எழுந்த அறிவு தாகத்திற்கு அளவில்லை, இஸ்லாம் மதம் குறித்து அறிந்து கொண்டான். உருது, பாரசீக மொழிகளைக் கற்றறிந்தான்.

மீண்டும் 11ம் வயதில் மாணவனாக தன் படிப்பை நஸ்ருல் தொடர்ந்தான். ஆறாம் வகுப்பு முடிந்தவுடன் படிப்பை அவனால் தொடர முடியவில்லை. அசன்ரூ சோலுக்குச் சென்று டீக்கடையில் வேலை பார்த்தான். அவனது மாமா பாஜ்லெகரீம் ஊர் ஊராகச் சென்று கிராமிய இசைக் கச்சேரிகளையும் நாடகங்களையும் நடத்துவர். அவரது கலைக்குழுவில் நஸ்ருல் சேர்ந்தான் நாடகங்களில் மட்டுமின்றி பாடல் எழுதுவது அவற் றிற்கு இசை அமைப்பது என சகல துறையிலும் அவன் முத்திரை பதித்தான்.

1914ல் மீண்டும் அவனது பள்ளிப் படிப்பு தொடர்ந்தது. பல பள்ளிகள் மாறினாலும் 10ம் வகுப்பு வரை தொடர்ந்து படித்தான்.

எல்லோரும் 10ஆம் வகுப்பு மெட்ரிகுலேஷன் தேர்வுக்கு
தயாராகிக் கொண்டிருந்தனர். ஆனால் நஸ்ருல் தனது 18 வயதில் அத்தேர்வைப் புறக்கணித்துவிட்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்தான. அங்கு மூன்றாண்டுகள் சேவை செய்தான். ஹவில்தாராகப் பதவி உயர்வும் கிடைத்தது. ராணுவத்தில் இருந்தாலும் அவனது இலக்கிய தாகம் குறையவில்லை. சிறுகதை, நாவல்,கவிதை என அவனது எழுத்துப்பணி தொடர்ந்தது. அவனது முதலாவது கவிதைத் தொகுப்பு 'விடுதலை' வெளியானது. 'ஒரு குற்றவாளியின் கதை' என்ற சிறு கதைத் தொகுப்பும் அச்சில் ஏறியது. முதலாம் உலகப் போர் முடிந்த நேரம் அவன் பணியாற்றிய பெங்கால் ரெஜிமெண்ட் படைப்பிரிவு 1920ல் கலைக்கப்பட்டது. நஸ்ருல் கல்கத்தா திரும்பினான். அவனது முழு நேரமும் எழுத்தும் இசையுமாய் இருந்தது. அப்போது தான் "யந்தன் ஹாரா (அடிமைத்தளையிலிருந்து விடு தலை) என்ற அவனது முதல் நாவல் வெளியானது. இலக்கிய வாழ்வின் திருப்புமுனை துவங்கியது. இந்தக் காலகட்டத்தில்தான் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முசாபர் அகமதுவுடன் நஸ்ருலுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அதனால் பல்வேறு சமூகப் பிரச்சனைகள் குறித்த பார்வையில், அணுகுமுறையில் அவரிடம் மாற்றம் ஏற்பட்டது. கல்கத்தாவில் 'பிஜ்லி (இடி முழக்கம்) என்ற இதழ் துவக்கப்பட்டது. நஸ்ருலின் கை வண்ணத்தில் வங்க மொழிக் கவிதை நவீனத்தவம் பெற்றது. அம்மொழியின் வீரியம் அவனது கவிதைகளில் பொங்கி வழிந்தது. அவரது 'வித்ரோஷி' என்ற தலைப்பிலான கவிதையைத் தாங்கிய பிஜ்லி இதழ் மட்டும் 29800 பிரதிகள் விற்பனையானது. நஸ்ருல் இஸ்லாமிய பழைமைவாதம் குறித்துக் கடுமையாகச் சாடினார். கிலாபத் இயக்கம் குறித்து அவர் குறிப்பிடுகையில் 'அர்த்தமற்ற மத அடிப்படை வாதத்தின் வெளிப்பாடு' என மிக வெளிப்படையாகச் சாடினார். அவரது கவிதைகள் மத ஒற்றுமையை வலியுறுத்தின.
மனிதநேயம் பாடின. மதவாதப் போக்குகளைச் சாடின

1921ல் ரவீந்திரநாத் தாகூரை சாந்தினிகேதன் சென்று நஸ்ருல் சந்தித்தார். அவருடன் பல விஷயங்களில் கருத்து மாறுபட்டாலும் அவரையே தன்னுடைய வழிகாட்டியாக நஸ்ருல் கருதினார்.

அலி அக்பர்கான் என்ற பத்திரிகை உரிமையாளரின் உறவுப் பெண்ணான நர்கிஸை நஸ்ருல் நேசித்தார். நேசம் காதலானது திருமணமும் நிச்சயமானது. ஆனால் திருமண நாளன்று மணம் புரிய மறுத்துவிட்டார் நஸ்ருல். திருமணத்தின் போது எழுதப்பட்ட ஒப்பந்தத்தில் வீட்டோடு மருமகனாக இருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு அவரைப் புண்படச் செய்தது. அப்போது அவருக்கு உறுதுணையாக இருந்து உரிய ஆலோசனை கள் சொல்லி உற்ற நண்பராய் இருந்தது முசாபர்
அகமதுதான்.


இருந்தபோதும் இந்தக் காதல் முறிவு அவரின் அடிமனத்தில் சோகமாய் கப்பிக் கிடந்தது. காதல் குறித்து அவரது கவிதைகளில் அச்சோகம் தூக்கலாய் வெளிப்பட்டது

'தூமகேது' பத்திரிகை: 1923ல் நஸ்ருலின் படைப்புகளில், வேகமும் வீச்சும் அதிகமானது. 'ஒரு குருவின் சோகம்' என்ற சிறு கதைத் தொகுப்பு அக்னி பீலா என்ற கவிதைத் தொகுப்பு, 'யுகபாணி' என்ற தலைப்பில் அரசியல் கட்டுரை தொடர்கள், பட்டுராஷி (கலகம்) என்ற கவிதைத் தொகுப்பு அப்போது வெளியாயின. பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நுகத்தடியிலிருந்து தேசத்தை விடுவிக்க நஸ்ருல் எழுதி தூமகேதுவில் வந்த கட்டுரைகள்
வங்க இளைஞர்களை உறுதி கொண்ட நெஞ்சம் உள்ளவர்களாய் மாற்றின.

தேசத்தின் சுதந்திரம் எப்படி இருக்க வேண்டும் என தனது கொள்கையை 'தூமகேது'வில் நஸ்ருல் வெளியிட்டார். சுயராஜ்யம் என்ற குழப்பம் தேவையில்லை. பாரதத்திற்குத் தேவை பரிபூரண சுதந்திரம. பாரத மண்ணின் ஒரு அடியைக் அந்நியன் ஆளக்கூடாது. நாம்தான் நம்மை ஆளவேண்டும். நம்மை நாட்டாமை செய்ய அந்நியனுக்கு ஏது உரிமை? என தனது அரசியல் கொள்கையைப் பிரகடனப்படுத்தினார். தூமகேது வில் அவர் எழுதிய கவிதைகளும் கட்டுரைகளும் சட்ட விரோதமானவை என அறிவித்தது பிரிட்டிஷ் அரசு. செப்டம்பர் 1922ல் அவரைக் கைது செய்து ஓராண்டு கடுங்காவல் தண்டனை அளித்து சிறையில் தள்ளியது. 1923ல் அலிப்பூர் சிறையிலிருந்து ஹூக்ளி சிறைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு பிரிட்டிஷ் ஜெயில் அதிகாரியின் செயலால் அவமரியாதையடைந்த
நஸ்ருல் தன்மானம் காக்க ஜெயிலில் 40 நாட்களுக்கு மேல் உண்ணாவிரதம் இருந்தார். இதை அறிந்த ரவீந்திரநாத் தாகூர் "உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்.
வங்க இலக்கிய உலகிற்கு , வங்க மொழிக்கு நீங்கள் தேவை" என தந்தி அனுப்பினார். "விலாசதாரர் தெரியவில்லை " என்று எழுதி அந்த தந்தி நஸ்ருலுக்கு பட்டுவாடா ஆகாமல் தாகூருக்கே திரும்பி வந்தது .தாகூர் தனது இசை நாடகமான பசந்தாவை (வசந்த காலம்) நஸ்ருலுக்கு அர்ப்பணித்தார். நான் பெற்ற எல்லா விருதுகளையும் விட என் குருநாதர் தாகூர் தனது இசை நாடகத்தை எனக்கு அர்ப்பணித்ததைத்தான் நான் பெற்ற மாபெரும் விருதாகக் கருதுகிறேன் என நஸ்ருல் அடிக்கடி குறிப்பிடுவாராம்.

ஹூக்ளி ஜெயிலிலிருந்து விடுதலையான நஸ்ருல் ஏப்ரல் 1924ல் பிரமிளாதேவி என்ற இந்துப் பெண்ணை மணந்தார். ஹூக்ளியில் சிறிதுகாலம் வாழ்ந்த அவர் பின்னர் கிருஷ்ணா நகரில் வாழ்ந்தார். அவரது கவிதைகள் விடுதலை வேட்கை, தேசிய உணர்வு என்ற தளத்திலிருந்து விரிந்து அடித்தள ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம், விழிப்புணர்வு, மதலற்றுமை என பல தளங்களில் இயங்கின


1929 டிசம்பரில் வங்க தேசத்தின் அரசியல் தலைவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் அனைவரும் கல்கத்தாவில் திரண்டனர். நஸ்ருல் இஸ்லாமிற்கு பாராட்டு விழா, கல்கத்தா நகரமே விழாக்கோலம் பூண்டது. அப்போது அப்பாராட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நஸ்ருலின் கவிதைத் திறனை வியந்து பாராட்டினார். அப்போது அவர் நினைவு கூர்ந்து பாடிக் களித்த நஸ்ருலின் பாடல் வரிகள்.

தள்ளாடுது படகு
கொந்தளிக்கும் வெள்ளம்
தவறிவிட்டது வழி
அறுந்துவிட்டது பாய்
சுக்கானைப் பிடிக்கத் துணிவுள்ளவர் வாருங்கள் இளைஞரே!முன்னே செல்லுங்கள்
சவால் விடுகிறது எதிர்காலம்
புயல் கடுமைதான்
எனிலும்போய்ச் சேர்ந்தாக வேண்டும் மறுகரை.


ஒரு நாள் நஸ்ருலுக்கு கடுமையான காய்ச்சல்.படுக்கையில் ஓய்வாக சரிந்து கிடந்தார். அவரைச் சுற்றி மருந்து மாத்திரைகள் தான். வெளியே லேசாகத் தூறிய மழை கடுமையாக மாறியது. இடியோடு கூடிய பெரும் கூச்சலில் ஊரே உறைந்து கிடந்தது. புயற்சாற்றின் பேரொலியில் ஊர் நடுங்கியது. திடீரென நஸ்ருல் படுக்கையை உதறித் தள்ளிவிட்டு மாடிக்கு ஓடினார். காலனே நடுங்கும் புயலையும் இடியையும் மின்னலையும் மாறிமாறி ரசித்தார். மழையில் நனைந்து ஆடினார். வலுக்கட்டாயமாக அவரை வீட்டிற்கு மனைவி இழுத்து வந்தார். உடனே பேனாவையும் பேப்பரையும் எடுத்த நஸ்ருல் ஒருமணி நேரத்திற்குள் வரைந்த கவிதை ஓவியம் 'ரூஜார்' (புயல் )மக்கள் மத்தியில் பிரபலமான நஸ்ருலின் கவிதை அது

தன்னுடைய 43 வது வயதிலேயே அழியாப் புகழ் பெற்ற நஸ்ருல் இஸ்லாம் Cerebral Palsy எனப்படும் மூளை நோயால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் பேசும் திறனை இழந்தார். கவிதைகள் பாடிய, பாடல்கள் இசைத்த ஒரு கவிக்குயிலுக்கு மௌனமே மொழியானது. வைத்தியத்தில் பணம் கரைந்தது. வறுமை அவரைத் துரத்தியது. புகழோடும் செல்வாக்கோடும் வாழ்ந்த போது அவருடன் இருந்தவர்கள் தங்களின் மனச்சாட்சியை மௌனமாக்கிக் கொண்டு மௌனமான கவிஞரை விலகிச் சென்றனர்.

1945ல் ராஞ்சிபிலுள்ள மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து லண்டனிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். நோயின் ஆரம்ப கட்டத்தில் தரப்பட்ட சிகிச்சை சரியில்லாததால்தான் நோய் முற்றி விட்டது என டாக்டர்கள் கை விரித்தனர். பின்னர் வியன்னாவிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குள்ள டாக்டர்கள் இந்நோயைக் குணப்படுத்த முடியாது என இறுதியாகத் தெரிவித்துவிட்டனர். 1953ல் இந்தியா திரும்பினார்

1962ல் நஸ்ருலுக்கு பத்மபூஷன் பட்டம் தந்து கெளரவித்தது இந்திய அரசு. அதே ஆண்டில் தாகூர் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது. பங்களாதேஷ் என்ற நாடு உருவானபோது அந்நாட்டின் வேண்டுகோள்படி டாக்கா சென்று அந் நாட்டு குடிமகனாக இருந்திட கவிஞருக்கு இந்திய அரசு அனுமதி வழங்கியது. 1974ல் டாக்கா பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.


*ஒருகரத்தில் புல்லாங்குழல்*,
*மறுகரத்தில் போர்முரசு*


என ஒருபுறம் தென்றலாக வீசும் மென்மையான கவிதைகளை எழுதிய நஸ்ருல் மறுபுறம் புயலாக மாறி கோபக்கனல் வீசும் கவிதைகளைத் தந்த புரட்சி கவிஞராவார்.