மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, December 11, 2021

மகாகவி பாரதியின்139 வது பிறந்த நாள் - வையத் தலைமை கொள்

 


  வையத் தலைமை கொள்


பாரதியின் பிறந்த நாள் 11.12.1882.  இன்று (11.12.2021) பாரதிக்கு 139 வது பிறந்த நாள்.

மகாகவி பாரதியின்  புதிய ஆத்திசூடி தந்த அற்புதமான வரி தான் "வையத் தலைமை கொள்" இது.முன்னேறத் துடிக்கும் இளைஞர்களை ஈர்க்கும் வரி. சிந்தக்க வைக்கும் வரி. 

அவ்வையின் ஆத்திசூடியை ஆரம்ப வகுப்புகளில் படித்திருப்போம்..  அதில் தையல் சொல் கேளேல் என்கிறார். அதாவது பெண்களின் சொற்களைக் கேட்டு அதன்படி நடக்காதே என்கிறார். ஆணும் பெண்ணும் சமம் என்ற எண்ணம் தோன்றாத காலம் அது . பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட காலம். எனவே அது அவர் வாழ்ந்த காலத்தின் பிரதிபலிப்பு. 

ஆனால் மகாகவி பாரதி நவீனக் கவிஞர்; புதுமைக் கவிஞர். ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானம் என்று வாழ்வோம் இந்த நாட்டிலே என்று உரத்தகுரலில் ஒலித்தவன் . எனவே தனது புதிய ஆத்திசூடியில் தையலை உயர்வு செய் என்கிறான். காலத்துக்கு  ஒவ்வாத கருத்துக்களை புறந்தள்ளியவன் பாரதி. "வேதம்" மாற்றவே முடியாதது, மாற்றினால் அதன் புனிதம் கெட்டுவிடும்  என்று மற்றவர்கள் எண்ணிக்கொண்டு  இருந்த போது  வேதம் புதுமைசெய் என்று சொன்னவன் அல்லவா அவன். கோபம் கூடாது என்றும்;  அது தன்னழிவை உண்டாக்கும் என்று காலம்காலமாய்  சொல்லிவரும் தமிழ்  சமூகத்தை நோக்கி ரௌத்திரம் பழகு என்று சொன்னவன் பாரதி. 

எனவே தற்கால சூழலுக்கு ஏற்ப  புதிய ஆத்திசூடியில் பாரதி எழுதிய வரியே" வையத் தலைமை கொள். வையம் என்றால் உலகம் என்று பெருள் .இவ்வுலகை தலைமை ஏற்று நடத்து என்கிறான் பாரதி. உலகம் என்பது  எல்லைக் கோடுகளால் தேசங்கள் என்ற பெயரில்  பலவாக பிரிந்து கிடக்கிறது.  பல்வேறு ஆட்சிமுறைகளை கடைப்பிடிக்கக்கூடிய நாடுகளின் தொகுப்பாக உள்ள இவ்வுலகிற்கு  ஒற்றைத் தலைமை சாத்தியமா என்று கேள்வி வருகிறது.

இப்படி ஒரு கேள்வி எழும் தெரியாமலா வையத் தலைமை கொள்' என்கிறான்?  பாரதி மிகவும் நுட்பமான கவிஞன். பலமொழிகள் அறிந்தவன். பன்முகத்தன்மை கொண்ட மகாகவி. எனவே நேரடியான அர்த்தத்தோடு மட்டுமின்றி  புதுமையான கோணத்தில்  பல்வேறு அர்த்தங்கள் தருகிற மாதிரி என்று சொல்கிறான். 

ஒருவர் எங்கிருந்தாலும் குறைந்தபட்சம்   அவரை சுற்றி உள்ளவர்களின்  நலம் பேணி அவர்களை மிகச் சரியான திசையில்  வழிநடத்திச் செல்ல வேண்டும் .அதுதான் உண்மையான தலைமைப் பண்பு. 

மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்த உலகம் உண்டு. அதை அவர்களே உருவாக்கி கொள்கின்றனர். அதில்  வாழ்கின்றனர்  .அந்த உலகிற்கு அவர்களே  தலைமை ஏற்றும் நடத்த விரும்புகின்றனர். பணிசெய்யும்  இடமே ஒருவருக்கு உலகாக இருக்கும். அந்த இடத்தில் எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக அங்கு அவர் இருக்கவேண்டும்.

 இதுபோலவே ஒருவர் தான் செய்துவரும்  தொழிலில், பணியாற்றும் இடத்தில்,விரும்பி செயலாற்றும் அரங்கில், அரசியல் தளத்தில்;  வாழுகின்ற ஊரில்,பகுதியில்  எல்லோரையும் வழிநடத்தும் தலைவனாக விளங்க வேண்டும் என்பதையே பாரதி சொல்கிறான். 

தலைமை ஏற்று நடத்த முதலில் தேவையானவை எவை தெரியுமா? பிறருக்கு உதவும் நல்ல மனம். எல்லோரையும் சமமாக நடத்துதல்;  தனது நலத்தை விட பிறரது நலனில் அக்கறை காட்டுதல் போன்றவையே . தனது விநாயகர் நான்கு மணிமாலை என்ற பக்தி பாடலில்  ஒரு தலைவனின் கடமை குறித்து பட்டியலிடுகிறான் மகாகவி பாரதி.

கடமையாவன; தன்னைக் கட்டுதல் 

பிறர்துயர் தீர்த்தல்; பிறர் நலம் வேண்டுதல்.

மேலும் ஒருதலைவன் தப்படி இருக்க வேண்டும்  என்பதை

 யாருக்கும் எளியனாய், 

யாருக்கும் வலியனாய், 

யாருக்கும் அன்பனாய் 

யாருக்கும் இனியனாய்

இருக்க வேண்டும் என்கிறான்.

 ஒருதலைவன் எளியவனாக இருக்கவேண்டும், தன்னை சார்ந்தவர்களுக்கு ஒரு கொடுமை நடக்கும் போது தட்டிக் கேட்கும் வீரனாகவும் எல்லோரிடமும் ஒரேமாதிரியான   அன்பு கொண்டவனாகவும்  இன்சொல் பேசுகிறவனாகவும் இருக்க வேண்டும் என்பதையே தனது பாடலில் குறிப்பிடுகிறார் .

மகாகவியின் புதிய ஆத்திசூடியை படித்து அதன்படி நடந்தால் தலைமை கொள்ளும் தகுதியை வளர்த்துக் கொள்ளலாம். எங்கு இருந்தாலும் தனக்கென  ஒருதனித்துவம் மிக்க ஒரு இடத்தை உண்டாக்கி  தலைநிமிர்ந்து வாழலாம்.

 எண்ணங்களே வாழ்க்கை, நல்ல எண்ணங்கள் உயர்வு தரும்.. தீய எண்ணங்கள் தாழ்வை உண்டாக்கும். இதையே புதிய ஆத்திசூடியில் எண்ணுவது உயர்வு என்கிறான் பாரதி.

தன்னைச் சார்ந்த பிறருக்கு கொடுமை ஒன்று நடக்கும்போது பார்த்துக்கொண்டு சும்மா  இராதே; நிமிர்ந்து நின்று தோளுயர்த்தி போராடு எதிர்த்து கேள் என்பதை 

"குன்றென நிமிர்ந்து நில்"

 "கொடுமையை எதிர்த்து நில்" 

என்கிறான் பாரதி

அதுபோலவே  புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். அவற்றை ஆழ்ந்து வாசிக்க வேண்டும் . புத்தகவாசிப்பு உள்ளவர்கள்;  எதிலும் ஆழ்ந்த ஞானம் பெற்றவர்களே ஏற்புடைய தலைமை பண்பு கொண்ட தலைவராக ஆகமுடியும் என்பதை

"நுனியளவு செல்"

 "நூலினைப் பகுத்துணர்"

என்கிறான் மகாகவி பாரதி.

வையத்தலைமை கொள் என்று மட்டும் செல்லாமல் அதனை அடைய நல்லதொரு வழிகாட்டியாகவும் பாதி இருக்கிறான். எனவே பாரதியின் கவிதைகளைப் படிப்போம்;தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்வோம்

பாரதியின்  புதிய ஆதிசூடியை குழந்தைகளுக்கு கற்றுத் தருவோம். தலைமைப் பண்புகள் கொண்டவர்கள் நிறைந்த தமிழ் சமூகத்தை உருவாக்க நம்மாலான பணி இது.


வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

வானம் அறிந்த அனைத்தும் அறிந்து 

வளர் மொழி வாழியவே!..


வாழிய நற்றமிழ்; 

வாழிய நற்றமிழர்;

வாழிய பாரதி

24 comments:

  1. அருமையான விளக்கம்
    பாராட்டுக்கள்-!

    ReplyDelete
  2. அருமை நல்ல விளக்கம் வாழ்த்துக்கள் l

    ReplyDelete
  3. சிறப்பான விளக்கம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. சித்தப்பா அற்புதமான விளக்கம், வணங்குகிறேன்

    ReplyDelete
  5. பாரதியின் அருமையான கவிதை வரிகளை எடுத்துக்கொண்டு சிறப்பான விளக்கங்களை கொடுத்திருக்கிறீர்கள். மிக அருமை!

    ReplyDelete
  6. நுட்பமான ஒவ்வொரு துறை பார்வையும், விளக்கமும் வெகுசிறப்பு.
    வையத் தலைமை என்பது அரசியல் தலைமையல்ல,தத்துவ, அறிவியல் தலைமைதான் என் புரிதல். மிக்கமகிழ்ச்சி,வாழ்க தமிழ்.வெல்கதமிழர்,
    ஒங்குக பாரதி புகழ்.

    ReplyDelete
  7. I know you sir above fourty years. In every accasoon you mention Bharatiyar article very simple and very nice. Thank you❤🌹🌹🙏 very much🙏

    ReplyDelete
    Replies
    1. பாரதியின் கவிதைகள் எளிய வார்த்தைகளில் வலிய கருத்துக்களை சொல்பவை .

      Delete
  8. Nice explanation. Moreover It is exactly needed in this time.

    ReplyDelete
  9. அருமை மற்றும் கருத்து செறிவு டன் அற்புதமான நடை

    ReplyDelete
  10. அடக்கு முறை காலத்திலும்
    பெண்ணுரிமை மற்றும்
    பிற சமுதாய உரிமையை
    அச்சமின்றி உரைத்த அசாத்தியன்.

    ReplyDelete
  11. மிக அருமையான பதிவு
    பாரதியை போற்றுவோர்
    தலைமை ஏற்பார்

    ReplyDelete
  12. மிக அருமையான பதிவு 🌹🌹🌹🌹

    ReplyDelete
  13. அருமை அற்புதம் சிறப்பு.
    தலைமைக்கு சுருக்கமான பதிவு.

    ReplyDelete
  14. அருமை சார்.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete