மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, December 11, 2022

மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

                          மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

மகாகவி பாரதி மத ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தவன். மத பேதங்களை அடியோடு வெறுப்பவன் . எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கும் சர்வ சமய சமரசக் கொள்கையை நேசிப்பவன் . எல்லா தெய்வங்கள் மீதும்  கவிதைகள் செய்து களிப்புற்றவன் . ஆனாலும் அவனுடைய கவிதைகளிலும் கட்டுரை தொகுப்புகளிலும் மதம் குறித்த பார்வையில் தெளிவிருந்தது .

 

 “உலகம் முழுதுக்கும் தெய்வம் ஒன்றே . அதுவே எல்லா மதங்களுக்கும் பொதுவான இறைவனாக வியாபித்திருக்கிறது  . அதுவே  பரம்பொருள் ஆகும். எனவே மத ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் . பெண்ணடிமைத்தனம் மண்மூடிப் போகவேண்டும்” என்ற  மகாகவியின் மதங்கள் குறித்த பார்வை  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்   அதன் அரசியல் கரமான பிஜேபி கட்சியின் மதவாத கொள்கைக்கு நேர் எதிரானது  . ஆனால் அந்த அமைப்புகள்  மகாகவியை ஹிந்துக் கவிஞன் என்று  கொண்டாடுகின்றன .அவனது பிறந்த நாளை பிராந்திய மொழிகளுக்கான உற்சவ நாளாக உயர்  கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்போவதாக   சொல்கின்றன. இது மிகப் பெரிய நகை முரண்.   

 

ஆர்.எஸ்.எஸ்க்கும் , பிஜேபிக்கும் சுட்டிக்காட்டும் அளவில் சுதந்திர  போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களோ , ஆளுமை மிக்க பிரபலமான அரசியல் தலைவர்களோ , கவிஞர்களோ இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான பஞ்சத்தை ஈடுகட்ட மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் தலைவர்களையும், சமூக போராளிகளையும், கவிஞர்களையும் தம்மவர்களாக காட்டிக்கொள்ள சகலவித பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களை தங்களவர்களாக காட்ட  பொய்க் கதைகளையும் புனைசுருட்டுக்களையும் அவிழ்த்து விடுகின்றனர் .

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை தங்களது தலைவராக காட்ட அவருக்கு குஜராத் நர்மதை நதிக்கரையில்  600 அடி உயரத்தில்  3000 கொடி ரூபாய் செலவில் வெங்கலச்சிலை எழுப்பியுள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபபாய் பட்டேல் வந்திருந்தால்  நாடு எப்பவோ வளர்ச்சி பெற்ற நாடாக ஆகியிருக்கும் என புருடா விடுகின்றனர் . நேருவுக்கு நேர் எதிராக அவரை நிறுத்துகின்றனர் .பட்டேல் முதல் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆர்.எஸ்.எஸ் மதவாத பிளவுவாத ஆபத்தான அமைப்பு என்பதை காரணம் காட்டி அதை அவர் தடை செய்தார் என்பதை  வசதியாக மறைத்து அவரை தங்களது ஆளாக காட்டிவது மிகவும்கேலிக்கூத்தானது .

 

சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸின் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்தி அதன் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியவர் . இந்துமதத்தின் சாதிய  கட்டமைப்பினை வெறுத்து ஒதுக்கிய அவர் மனம் வெறுத்துப்போய்  புத்த மதத்தை தழுவியவர் . சமீப காலமாக அம்பேத்கர் ஒரு  இந்து தான் என்று பொய்யை பரப்புகின்றனர் . தமிழகத்தில் அவரது சிலைகளுக்கு காவி ஆடை அணிவிப்பதையும், குங்குமப் போட்டு வைப்பதையும் முன்னெடுத்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா போன்ற பிரபலங்களை வைத்து மோடி ஆட்சியில் அமலாக்கப்படும் திட்டங்களை கண்டால் அம்பேத்காரே பெருமை அடைவார் என்று சொல்ல வைக்கின்றனர் .

 

எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்று சொன்னது மட்டுமின்றி எந்த ஒரு இடத்திலும் மதச் சாயலுக்கு இடமளிக்காமல் திருக்குறளை எழுதியவர்  திருவள்ளுவர்  . ஆனால் அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லி தமிழகத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகள் அவரது சிலைகளுக்கு   காவி ஆடை அணிவிப்பதும், நெற்றியில் திருநீறு பூசுவதும் என அபத்தத்தை வேண்டுமென்றே செய்து வருகின்றனர்.

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை , அம்பேத்கரை , திருவள்ளுவரை தம்மவர்களாக காட்டிக் கொள்ள முயலும் சங் பரிவாரின் மதவெறி போக்கிரிகள் தோல்வி அடைந்து வருவது போல மகாகவி பாரதியை அவர்களது கவிஞராக காட்டிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் . உண்மையை  ஒளிரச் செய்யும்  பாரதியின் கவிதைகள் , கட்டுரைகள் முன்னே இவர்களது பொய்களும் , போலித்தனங்களும் எரிந்து சாம்பலாக பொசுங்கிப் போய்விடும்.

 

மதம் குறித்து பாரதியின் பார்வையும் கருத்தும் என்ன என்பதை  அவனது எழுத்துக்கள் மூலமே நாம் பார்ப்போம் .

 

“ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் 

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் 

வேதியராயினும் ஒன்றே- அன்றி 

 வேறு குலத்தினராயினும் ஒன்றே”

 

என்கிறான் பாரதி.

 

ஜாதி மதங்களைப் பார்க்காமல் , பிராமணர்களையும், இதர சாதியினரையும் இரே தட்டில் வைத்து பார்க்கிறான் மகாகவி. சாதி மத பேதங்களை தீமூட்டி வளர்ப்பதன் மூலம் தனது ஓட்டு வங்கியை விரிவுபடுத்த முடியும்  என்ற முனைப்பில் செயல்படுகின்ற , ஜாதிய   மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ஆர்.எஸ்.எஸ, மற்றும் பரிவார  அமைப்புகள்   ஜாதி மத பேதங்களை வெறுத்தொதுக்கும் பாரதியை கொண்டாடாடுவதும் விழா எடுப்பதும்  சாத்தான்கள் மகான்கள்  போல் வேடமணிந்து அறம் பேசுவதற்கு ஒப்பானதாகும்.

 

“என் தாய் கண்ணன் . அவள்  நான் வேடிக்கை பார்த்து நகைத்திட எதையெல்லாம்   உருவாக்கி இருக்கிறாள் என உங்களுக்கு  தெரியுமா”?  என்ற கேள்வியை நம்மிடம் கேட்டுவிட்டு அதற்கான   பதிலை “கண்ணன் –என் தாய்” என்ற கீழ்க்கண்ட கவிதையில் பாரதி சொல்கிறான்.

 

“நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்-மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும்-இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்”

 

 நான் வேடிக்கை பார்த்து சிரிக்க என் தாய் கண்ணன்   உண்டாக்கியவையே “புனையப்பட்ட போலி வேதங்கள், மதத்தின் பேரால் நடக்கும் படுகொலைகள், மன்னர்களின் அபத்தமான செயல்கள் , மூத்தவர்களின் போலியான பழக்க வழக்கங்கள் , அறிவற்ற இளைஞர்களின் கவலைகள்”போன்றவை என்கிறான் பாரதி .

 

மேலும் “வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு” என்ற தலைப்பிலான தனது கவிதையில் சொல்வதைப் பாருங்கள்

 

“கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்”  


   கணவர் இறந்ததும் மனைவியை எரித்து சதி போன்ற இன்ன பிற இந்து மதத்தில் உள்ள பிற்போக்கு செயல்களில் ஈடுபடுபவர்களை கொடுமதப்பாவிகள் என்கிறான் . அவர்கள் மீது பாரதி காட்டும் வெறுப்பை இப்பாடலின் மூலம் உணரலாம்.

 

மகாகவி ஹிந்து மதத்திலுள்ள தெய்வங்களை மட்டும் பாடியவன் அல்ல.கிறித்துவ மதத்தின் தேவ தூதர் ஏசுவையும் ,இஸ்லாம் மதம் காட்டும் இறைவன் அல்லாவையும் பாடிக்களித்தவன்.சிலுவையில் அடிக்கப்பட்டு மாண்ட ஏசுபிரான் மூன்றாவது நாளில்உயிர் பெற்று எழுந்ததை “யேசு கிறிஸ்து” என்ற கவிதையில் இப்படி சொல்கிறான் பாரதி.

 

“ஈசன் வந்துசி லுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;

தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே


நாசமின்றி  நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்”  

 

  என் தேசத்து மக்களே!, இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்றாம் நாளில் உயிர் பெற்று வந்ததன் உட்கருத்து எது எனத் தெரியுமா? நமது ஆணவத்தை ஒழித்துவிட்டால் தெய்வம் நமக்குள்ளே புகுந்து எவ்வித தீங்கும் இன்றி நம்மை காக்கும் என்பதே என்கிறான் பாரதி .

 

 அல்லாவைப் பற்றி சொல்லும் போது சொல்லாலும் மனதாலும் தொடவொணா ஜோதி என்கிறான் அவன் .மேலும்  அல்லாவையும் , யெகோவாவையும்( தேவனையும்)  அவர்களது  நாமத்தை போற்றுபவர்களின் திருவடிகளையும் பேணவேண்டும் என்று தனது சுயசரிதையில் சர்வ மத சமரசம் என்ற தலைப்பிலான கவிதை வரிகளில் அவன் சொல்கிறான்.  

 

“பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”

 

பாரதி தனது  முரசு பாடலில் மதத்தின் பெயரால் சண்டைகள் வேண்டாம் என்பதை கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறான்   

 

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

 

உலகில் தெய்வம் ஒன்றே.அது எல்லாப் பொருள்களிலும்  வியாப்பித்திருக்கிறது. அதையே நாம் அனைவரும் வணங்குகிறோம் எனவே  .மதச் சண்டைகள் வேண்டாம் என்கிறான் பாரதி

புதிய ஆத்திசூடியில் கடவுள் வாழ்த்து என்ற மரபை பயன்படுத்தும் பாரதி அதை “பரம் பொருள் வாழ்த்து” என புதுமை செய்து எழுதிய கவிதை அற்புதமானது

 

“சைவத்தின் சிவன் ,வைணவத்தின் திருமால் ,இஸ்லாத்தின் அல்லா ,கிறிஸ்தவத்தின் தேவன்  எல்லோரும் ஒன்றே . அவர்கள் அனைவரும் இறைவனைக் குறிக்கும் பரம் பொருளின் பல ரூபங்கள் .ஒளி வீசும் அறிவே அப்பரம் பொருளின் இயல்பு . எனவே மத வேற்றுமை பார்ப்பது அர்த்தமற்றது . மதங்கள் வெவ்வேறாயினும் பரம்பொருளாகிய இறைவன் ஒன்றே. அந்த இறைவனை ஒவ்வொருவரும் அவரவர் மதப்படி வணங்குகிறார்கள் .எனவே மத சச்சரவு அனாவசியமானது” என மத ஒற்றுமை பேணுவதன் அவசியத்தை தனது புதிய ஆத்தி சூடியை  படிக்க துவங்கும் முன்பே வலியுறுத்துகிறான் ..புதிய ஆத்திசூடியின் முதலில்  வரும் பரம் பொருள் வாழ்த்தை படித்தால் பாரதியின் மதம் குறித்த பார்வையை நாம் காணமுடிகிறது.  

 

ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்

 

சுப்பராம  தீட்சிதர் பாரதியின் ஊரான எட்டையாபுரத்தை சேர்ந்தவர் . கர்னாடக இசையில் வல்லுநர்.கர்னாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் இசைப்பணி குறித்து சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி என்ற நூலை எழுதியவர். அவரை மறைவையொட்டி எழுதிய கவிதையில்

 

“மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்கலாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்”

 

என்கிறான். அரசர்களையும், பொய்யான அறிவினையுடைய மதப் பெரியவர்களையும் வணங்காத நான் , உங்களை கண்டதும் தலை சாய்த்து மரியாதை செலுத்தினேன் என்று  சொல்லும் இந்த கவிதையின் மூலம் மதங்கள் குறித்த பாரதியின் உள்ள வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது.

 

 பழைய பொய்ச்சிலைகளை  வணங்குவதை ஒழித்து எங்கும் வியாப்பித்திருக்கும் பிரமத்தை தொழவேண்டும் என்று முமது நபிகள் ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார்”  என்று  “காமதேனு- முகமது நபி” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறான் பாரதி. எல்லா மதத்தின் தெய்வங்களையும் பிரம்மம் என்ற பரம்பொருளாக பார்க்க பழகியவன்  மாகாகவி என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது .

 

மதம் குறித்த பாரதியின் பார்வை தெளிவானது . உலகில் உள்ளது ஒரே தெய்வம். அது எல்லா மதங்களிலும் பல்வேறு பேர்களில் வியாபித்திருக்கிறது .எனவே  சர்வ மத சமரசம் உலகில் நிலவ வேண்டும். மத சச்சரவுகள் , மத மோதல்கள் , போன்றவை அர்த்தமற்றவை. என்ற கருத்துக்களை  தனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பல்வேறு வடிவில் வலியுறுத்தி வருகிறான் .

 

மதங்கள் குறித்து பிற்போக்கான பார்வையை உடைய  வலதுசாரி அமைப்புகள்  பாரதியை வெறுக்கவே செய்வார்கள்   ஆனால் அவர்கள் பாரதியை போற்றுவதும் அவனை   தங்களது கவிஞனாக அடையாளம் காட்ட நடத்தும் கூத்துகளும்  உலக மகா நடிப்பு. என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மதம் குறித்த பாரதியின் சிந்தனைகளை இளைஞர்களிடம் எடுத்து செல்வதும், சங்பரிவார் அமைப்புகளின்  உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதும், தமிழ் சமூகம் அவர்களை புறந்தள்ள வைக்க செய்வதும்  நம்முன்னுள்ள  கடமையாகும்.

 

மாதர்- தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் “உலகிலுள்ள மத பேதங்களை எல்லாம்  வேருடன் களைந்து சர்வ சமய சமரச கொள்கையை நிலை நாட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ்நாடே சரியான களம்” என்று தீர்க்கமாக தமிழ் மக்களை கணித்தவன்  பாரதி. அவனின்  வழி நடப்போம் . தமிழர்களிடையே   மத வெறியை தூண்டும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிவோம்.

 

பி.சேர்முக பாண்டியன் ,மதுரை