மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, July 14, 2022

கண்ணம்மா என் காதலி _ வீணையடி நீ எனக்கு மேவும் விரல் நானுனக்கு



கண்ணம்மா-என் காதலி

பாயு மொளி நீ யெனக்கு,
பார்க்கும் விழி நானுனக்கு,

தோயும் மது நீ யெனக்கு,
தும்பியடி நானுனக்கு.

வாயுரைக்க வருகுதில்லை,
வாழி நின்றன் மேன்மையெல்லாம்;

தூயசுடர் வானொளியே! 
சூறையமுதே!கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு,
மேவும் விரல் நானுனக்கு;

பூணும் வடம் நீ யெனக்கு,
புது வயிரம் நானுனக்கு;

காணுமிடந்தோறும்  நின்றன் 
கண்ணிண் ஒளிவீசுதடீ

மாணுடைய பேரரசே! 
வாழ்வு நிலையே!கண்ணம்மா!

வான மழை நீ யெனக்கு 
வண்ண மயில் நானுனக்கு;

பானமடி நீ யெனக்கு,
பாண்டமடி நானுனக்கு;

ஞான வொளி வீசுதடி,
நங்கை நின் றன் சோதிமுகம்,

ஊனமறு நல்லழகே!
ஊறு சுவையே! கண்ணம்மா!

வெண்ணிலவு நீ யெனக்கு,
மேவு கடல் நானுனக்கு;

பண்ணு சுதி நீ யெனக்கு,
பாட்டினிமை நானுனக்கு;

எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் 
எண்ணமில்லை நின்சுவைக்கே;

கண்ணின் மணி போன்றவளே! 
கட்டியமுதே! கண்ணம்மா!

வீசு கமழ் நீ யெனக்கு,
விரியுமலர் நானுனக்கு;

பேசுபொருள் நீ யெனக்கு,
பேணுமொழி நானுனக்கு;

நேசமுள்ள வான்சுடரே! 
நின்னழகை யேதுரைப்பேன்?

ஆசை மதுவே!கனியே!
அள்ளு சுவையே கண்ணம்மா!

காதலடி நீ யெனக்கு,
காந்தமடி நானுனக்கு;

வேதமடி நீ யெனக்கு,
வித்தையடி நானுனக்கு;

போதமுற்ற போதினிலே 
பொங்கி வருந் தீஞ்சுவையே!

நாதவடி வானவளே! 
நல்லஉயிரே கண்ணம்மா!

நல்லவுயிர் நீ யெனக்கு,
நாடியடி நானுனக்கு;

செல்வமடி நீ யெனக்கு,
சேமநிதி நானுனக்கு;

எல்லையற்ற பேரழகே!
எங்கும் நிறை பொற்சுடரே!

முல்லைநிகர் புன்னகையாய்!
மோதுமின்பமே!கண்ணம்மா!

தாரையடி நீ யெனக்கு,
தண்மதியம் நானுனக்கு;

வீரமடி நீ யெனக்கு,
வெற்றியடி நானுனக்கு;

தாரணியில் வானுலகில் 
சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்

ஓருருவமாய்ச் சமைந்தாய்!
உள்ளமுதமே! கண்ணம்மா!

No comments:

Post a Comment