மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Thursday, December 15, 2011


                  தமிழ் அன்னை தந்த மகாகவி பாரதியின் பிறந்தநாள் .எட்டயாபுரத்தில் சின்னசாமி ஐயருக்கும், இலக்குமி அம்மையாருக்கும் மகனாக டிசம்பர் 11 , 1882 அன்று பிறந்தார். அவரது இயற் பெயர் சுப்பிரமணியன் .செல்லப் பெயர் சுப்பையா .
                       
                 தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவர் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு . அந்த படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறார். 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே

கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

                      இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் உங்களுக்கு எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 

"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 

என தொழிலாளர்களை நோக்கி கவி பாடுகிறான்.

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

                     அது மட்டுமா .தொழிலாளர்களே! நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்களும் , மக்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியும் தருபவர்களும் நீங்களே . எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .

நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

                         இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

                       அது மட்டுமா . "உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

                        இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

                       என்று ஆனந்த கூத்தாடுகிறான்.பாரதிதனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப் பறை சாற்றுகிறான். .உலகம் முழுதும் அப்புரட்சி பரவ ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான்எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

                       1600 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை வெள்ளையகளின் அடிமையாக்கியது வரலாற்று உண்மை. ஆனால் இன்று என்ன நடக்கிறதுஇப்போது வெள்ளைகார கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையும் அள்ளி வழங்கி வெண்சாமரம் வீசி வரவேற்கிறது மத்திய அரசு. உள்ளூர் தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது மத்திய அரசு . ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை . அதற்கு காரணம் இந்திய தொழிலாளர்கள் ஜாதி, மத ,அரசியல் ரீதியாக பிரிந்து கிடப்பதும் , வர்க்க உணர்வின்றி நொந்து கிடப்பதுவுமேயாகும் .எனவே பாரதி கண்ட கனவுலகம் படைத்திட " சிலர் வாழ, பலரை வாடவைக்கும்" மத்திய அரசின் பொருளாதரக் கொள்கைகளை எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமையுடன் கூடிய ஒற்றுமை நமக்கு மிக அவசியம். "ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை போர் பரணியாகப் பாடுவோம்.

“பாரதி பிடித்த தேர்வடம் நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால்  தேர் நடக்கும் - அன்றேல்
வெய்யில்  மழையில் கிடக்கும்"

                           என்ற பரிணாமன் கவதையை மகாகவி பாரதியாரின் இன்றைய பிறந்த நாளில் நினைவு கூர்வோம். அவன் பிடித்து விட்டு சென்ற தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே.

குறிப்பு:
இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும் காலத்தை யுகமாக பிரித்துள்ளனர்.
கிருத யுகம் - அறம், உண்மை நிறைந்த யுகம். வறுமையில்லை, துயரமில்லை.எங்கும் மகிழ்ச்சி தவழும் யுகம். இந்த யுகத்தில்அறக்கடவுளுக்கு நான்கு கால்கள் உண்டு. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு.
எனவேதான் பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது
"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"
என்கிறான். இரஷியப் புரட்சி மக்களுக்கு கிருத யுகம் வந்துவிட்டதாக பழமையோடு புதுமையைப் பொருத்துகிறான்
திரேதா யுகம் - அறக்கடவுள் தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார் .இராமன் அவதாரம் செய்ததது இந்த யுகத்தில் தான்
துவாபர யுகம்--அறக்கடவுள் தன் இரு கால்களை இழந்து இரண்டு கால்களுடன் இருப்பார் .மஹாபாரதம் நடந்தது இந்த யுகத்தில் தான்
கலியுகம்--அறக்கடவுள் தன் மூன்று கால்களை இழந்து ஒரு காலுடன் இருப்பார் .

Tuesday, October 25, 2011

Homage to Diwakar,


Homage
In fond memory of Diwakar Senior Accountant office of the Director of Postal Accounts Bangalore who died on 26.9.2011
Oh! Diwakar my dear friend!!
You departed to the heavenly abode leaving us all here.
You came along with us for inspection to Karwar and Kumta  ,
The beautiful towns in the Arabian coast of Karnataka  .
Karwar beach saw you teaching me some exercises for good health
I saw your sportsmanship with awe in reverence.
Every time  I do the exercises my memories rush to you  and
 Every nerve of my body and heart  thank you for it.
You showed me the way for health, alas!  You missed the path.

You took me alongwith your wife and son as a family member
In the tour to Gokarna , Mudeshwar, Om Beach, Yana, Sirsi and Banvasi
Whenever I reminisce of these places my memories go back to you
The thought of Gangtok brings memories as you arranged LTC for us all
Who never had an iota of idea in  visiting North East even in our dreams
Your imposing posture with a broad smile in the photos taken there
Makes me remember all these places ingrained in my heart.

Reposing faith on me , you shared your trials and tribulations
Joys and sorrows ,bitter and sweet experiences with me.
Your childhood stories of thrilling adventures enchanted me
I used to retell to my boys and enjoyed them.

Now I am adopting sideways sleeping posture  
With shoulder and elbow resting  in the pillow
For you advised me this posture
 Will bring good sleep sans nightmares.
Alas!  You went for eternal sleep.

You are loving husband to your wife
Doting father to your son Sagar
Good friend to all in the office.
Where can we see your ever-smiling face?
How can we hear your affectionate words?
With a peculiar Tamil accent .

You invited me umpteen times to your home
To stimulate my tasting buds with the dishes
Prepared with your culinary skills
I missed all the chances you gave to me
But I am ready for it, Where are you now?

Your body reached the Lotus Feet of the Lord in heaven.
But your memories will ever remain in our hearts
No force in the Earth including your death
Can not take your memories away from us.

……….By P.Sermuga Pandian
*****Written  with heart full of intense sorrow immediately after having Darshan of   his body that was brought to the office for paying tributes by the colleagues on 26.9.2011




Tuesday, September 20, 2011

மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)


மனம் தளராத பெண் போராளி -இரும்பு மனுஷி- ஐரோம் சானு ஷர்மிளா ( Irom Chanu Sharmila)

                              Armed Forces ( Special Powers) Act 1958 ( இராணுவத்தினருக்க்கான சிறப்பு அதிகாரத்திற்கான சட்டம் 1958)   கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட மணிப்பூர் , நாகாலந்து, மிசோரம் , மேகாலயா, திரிபுரா,அருணாசல பிரதேசம் போன்ற வட கிழக்கு மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீரிலும் அமலில் இருந்து வருகிறது. இராணுவத்தினருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரத்தை இச்சட்டம் தந்துள்ளது. கேள்வி கேட்பாடே இல்லாமல் யாரையும் எப்போதும் கைது செய்ய்யலாம் . விசாரணைக்கு அழைத்து செல்லலாம்.  அவர்கள் திரும்பி வரலாம் வராமலும் போய்விடலாம். தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா என்பதை விசாரிக்கப் போகிறோம் என்று சொல்லி அள்ளிச் செல்லப் பட்ட குறைந்த வயதுள்ள பெண்களும், ஆண்களும் திரும்பி வராவிட்டல் அவர்களது பெற்றோர் படும் துயரங்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா ? மனித உரிமை மீறலுக்கு அப்பட்டமாக துணை போகும்  கொடுஞ்சட்டம் அது.

                                 அன்று நவம்பர் 2, 2000 . மணிபூர் தலைநகரம் இம்பால் அருகில் உள்ள நகரம் மலோம் ( MALOM) . அங்குள்ள பேருந்து நிறுத்தம் ஒன்றில் மாலை நேரத்தில் பஸ்ஸுக்கு பலர் காத்திருந்தனர். அவர்களிடம் பல கனவுகள். வரும் பேராபத்தை உணரவில்லை. ஓரிரு நட்களுக்கு முன்னர் தங்களது முகாமில் குண்டு வீசிய தீவிரவாதி ஒருவனைப் பிடிக்க அந்த நகருக்குள் திடீரென நுழைந்த அஸ்ஸாம் ரைபில்ஸை சார்ந்த இராணுவத்தினர் அங்கிருந்தவர்களை கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தனர். அந்த இடத்திலேயே 10 பேர் மாண்டனர். மலோம் மசாக்கர் என மணிப்பூர் பத்திரிக்கைகள் வர்ணித்தன. அவர்களில் ஒருவர் 1988ல் குழந்தைகளுக்கான வீர சாகச விருது பெற்ற 18 வயது சினாம் சந்திரமணியும் ஒருவர். தன் சித்தியை அழைத்துகொண்டு பஸ் ஏற்றிவிட வந்த அவரது மூத்த சகோதரரும், 62 வயது நிரம்பிய அவரது சித்தியும்   கோரமாக மடிந்தனர், ஒரே குடும்பத்தை சார்ந்த மூவர் அக்கோர சம்பவத்தில் இற்ந்து போயினர் . 
                                  தீவிரவாதத்துடன் சம்பந்தமே இல்லாத சாதாரண மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துயர சம்பவம் 28 வயது மங்கை சானுவுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த Armed Forces ( Special Powers) Act 1958 ( AFSPA)  சட்டத்தால் தானே இம்மாதிரியான துயர சம்பவங்கள் நடைபெறுகின்றன . அச்சட்டத்தை வாபஸ் பெற ஆளும் மத்திய அரசைக் கோரி காந்திய வழி அறப்போராட்டமான உண்ணாவிரத போராட்டமே சிற்ந்த வழி என கருதினார்.. தன் தாயின் ஆசிர்வாதத்துடன் மறுநாள் நவம்பர் 3ம் தேதி வெள்ளிக் கிழமையன்றே தனது உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினார். போராட்டம் சில நாட்கள் தொடர்ந்தது. மக்களின் ஆதரவு பெருகியது .அதுவரை தூங்கி கிடந்த அரசு எந்திரம் விழித்துக் கொண்டது. .                            

                                 தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று சொல்லி அவரைக் கைது செய்து ஜெயிலில் தள்ளியது அரசு.  தற்கொலை முயற்சிக்கு ஓரண்டு சிறை தண்டனை தரப்பட்டது. அங்கும் தனது உண்ணாவிரதத்தைத் தொடர்ந்தார். கட்டாயப் படுத்தி மூக்கு வழியாக அவர் உயிரை நீடிப்பதற்கான திரவ உணவு தரப்பட்டது.ஒவ்வொரு ஆண்டும் தண்டனை முடிந்து அவர் ஜெயிலில் இருந்து விடுதலை அடைவதும், வெளியில் வந்தவுடன் தன் உண்ணவிரத போராட்டத்தைத் தொடர்வதும் , மீண்டும் தண்டனை பெற்று சிறையில் அடக்கப் படுவதும் , அங்கும் போராட்டத்தை தொடர்வதால் கட்டயப்படுத்தி திரவ உணவுகள் வழங்கப் படுவதும் 11 ஆண்டு களாகத் தொடந்து நடைபெற்றுக்கொண்டு வருகிறது . இன்று அவருக்கு வயது 39. உலகில் நீண்டகாலம் உண்ணாவிரதம் இருந்து வரும் போராளி இவர்தான் என சரித்திர பதிவுகள் சொல்கின்றன.

                             ஊழலுக்கு எதிரான அன்னா ஹஜாரேயின் போராட்ட்டத்தை சல்லி சல்லிய அலசித் தீர்த்தன இந்திய பத்திரிக்கைகளும் , டிவி மீடியாக்களும். ஆனால் மன உறுதி மிக்க ஒரு பெண் போராளியின் 11 ஆண்டுகால உண்ணாவிரதப் போராட்டம் அவற்றின் கண்ணில் படவில்லை . சமூக ஆர்வலரும் எழுத்தாளருமான அருந்ததி ராய் மீடியாக்களின் இக்குறுகிய கண்ணோட்டம் குறித்து ஹிந்து பத்திரிக்கையில் கடந்த ஆகஸ்ட் 21 அன்று எழுதிய கட்டுரை பெரும் விவாததை தேசிய அளவில் உண்டாக்கியது . இருந்தபோதும் உலகின் பல்வேறு நடுகளில் இயங்கிவரும் மனித உரிமை அமைப்புகளின் தலைவர்களும், ஐரோப்பா பார்லிமெண்ட் உறுப்பினர்கள் பலரும், பிரிட்டனின் பசுமை கட்சியும் சானுவின் இப்போராட்டத்தை நிறுத்த உடனடி ந்டவடிக்கைகளை மேற்க்கொள்ளுமாறு இந்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

                                மணிப்பூர் மாநிலத்தின் இம்பால் கிழக்கு மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்திலிருந்து தங்க்ஜம் மனோரமா என்ற 34 வயது பெண்மணியை தீவிரவாதி என்று சொல்லி அஸ்ஸாம் ரைபில்ஸ் என்ற ராணுவ பிரிவு 2004 ஜுலையில் விசாரணைக்கு அழைத்து சென்றது. ஆனால் அவர் மறுநாள் கற்பழிக்கபட்டும் ,குண்டுகள் உடலை சல்லடையாக்கியும் பிணமாக அருகில் உள்ள கிராமத்தில் கிடந்தார் .  . மனோரமாவின் உடல் சவக்கிடங்கில் எடுக்கப்படவில்லை. மணிப்பூர் முழுதும் போராட்ட களமாகிப் போனது.   மூன்றாம் நாளில்  இம்பாலில் இருந்த அஸ்ஸாம் ரைபில்ஸ் பிரிவு கட்டடத்தின் கேட் முன்னே திடீரென கூடிய பெண்கள் நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு எழுப்பிய கோஷங்கள் இப் பிரச்சனையின் கோர முகத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இது இராணுவத்தினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கான போராட்டத்தின் வீச்சை அதிகப்படுத்தியது.நாடு முழுவதும் இச்சட்டத்திற்கு எதிரான கண்டக்குரல்கள் ஓங்கி ஒலித்தன

                                பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஜஸ்டிஸ் பி.பி.ஜீவன் ரெட்டி தலைமையில் இந்த சட்டத்தை மறு ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்க  ஐந்து நபர் கமிட்டியை அமைத்தது. ஜுன் மாதம் 2005ல் இக்கமிட்டி தனது பரிந்துரைகளை அரசுக்கு சமர்பித்தது . அதில் மக்களை அடக்கி ஒடுக்கும் மனித உரிமை மீறல் மிகுந்த இக்கொடிய சட்டம் முழுமையாக வாபஸ் பெறப்பட வேண்டும். அதற்கு பதிலாக இந்தியா முழுதும் தற்சமயம் அமலில் உள்ள  சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் சட்டத்தையே (Unlawful Activities (Prevention) Act, 1967,) கலவரப் பகுதிகள் என அறிவிக்கப்பட்ட பகுதிகளிலும் விரிவு படுத்தலாம் என அரசுக்கு அறிவுறுத்தியது. ஆனால் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் பிரணாப் முகர்ஜி சிறப்பு அதிகாரங்கள் இல்லாமல் கலவரப் பகுதிகளில் இராணுவம் செயல் பட முடியாது என்று சொல்லி அப் பரிந்துரைகளை நிராகரித்தார். பொருளாதரச் சீர்திருத்தம் பற்றி பேசும்போதெல்லாம் அதற்கு மனித முகம் வேண்டும் எனக் கூறிவரும் பிரதமர் மன்மோகன் சிங் இச்சட்டத்திற்கு மனித முகம் கொண்டு வர உரிய திருத்தம் செய்யப்படும் என தொடர்ந்து சொல்லி வருகிறார் . ஆனல் இது வரையிலும் அச்சட்டம் குறித்து உருப்படியாக எந்த  நடவடிக்கையையும் மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. இராணுவத்திலுள்ள உயர் அதிகார மையங்கள் அவர்களின் "சகல" நடவடிக்கைகளுக்கும் பாதுகாப்பு வழங்கும் அச்சட்டத்தில் அரசு கை வைக்காமல் பார்த்துக்கொள்கின்றன என சொல்லப்டுகிறது.

                                  இச் சட்டம் அமலில் உள்ள எல்லா மாநிலங்களிலும் இராணுவத்தின் மனித உரிமைமீறல்கள் தொடர்கின்றன. இதை ரத்து செய்ய சொல்லி போராடும் வீர மங்கை ஐரோம் ஷர்மிளாவின் போராட்டமும் 11 வது ஆண்டாக தொடர்கிறது.இதனிடையே ஷர்மிளா சமீபத்தில் கொடுத்த பத்திரிக்கை பேட்டியில் தான் எதற்கு எதிராக இத்தனை ஆண்டு காலம் போராடி வருகிறேனோ அந்த சட்டம் வாபஸ் பெறும் வரை தனது உண்ணாவிரத போராட்டம் தொடரும் என்றும், அதன் பின்னரே தான்  நீண்ட நாட்களாக காதலித்து வரும் இந்திய வம்சாவளி இங்கிலாந்து பிரஜையை திருமணம் செய்வேன் என்று தெரிவித்துள்ளார். தனது மாநில மக்களின் பதுகாப்பிற்காக தன் உடலையே ஆயுதமாக்கிக் கொண்டு  போராடி வரும் அவரது துயரங்களை நேரில் காண சகிக்காத அவரது அன்னை ஐரோம் சக்கி அவரை நேரில் காண்பதையே தவித்து வருகிறார் .ஷர்மிளா தனது போரட்டத்தில் வெற்றி பெற வேண்டும்;  காதலித்து வருபவரை விரைவில் திருமணம் செய்ய வேண்டும்;  அவரைப் பெற்றெடுத்த தாய் அவரை நேரில் காணும் நல்ல சூழல் உருவக வேண்டும் என்பது தான் நம் அனைவரின் வாழ்த்தாக இருக்கட்டும்.   மத்திய அரசிற்கு அதற்கான ஞானம் பிறக்கட்டும் .

Sunday, May 08, 2011

Short story- Thangaraju



சிறுகதை

                                                        தங்கராசு! 

தங்கராசை நீண்ட வருடங்களுக்குப்பிறகு எங்க ஊரில் பார்த்தேன். ஊருக்கு ஒரு வேலையாக வந்திருந்த நான், அந்த வேலையை முடித்துவிட்டு மாலை மதுரை செல்லும் பேருந்திற்காக காத்திருந்த பொழுது தங்கராசை எதேச்சையாக பார்த்தேன். அடையாளம் கண்டுகொண்டு அதே தயக்கத்துடன் அருகில் வந்தான்.
“எப்படி இருக்க தங்கராசு?” என்றேன்.
அவன் சொன்ன பதிலை கேட்டவுடன் முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை! அவன் வார்த்தையிலும் முகம் காட்டிய உணர்ச்சிகளிலும் கோபம இல்லை. ஆனால் ஒரு ஆதங்கமும், ஏமாற்றமும் தெரிந்தது. எதற்க்காக அப்படி சொன்னான்?. என்று எனக்கு யோசிக்க நேரம் தேவைப்பட்டது.
“என்ன தங்கராசு சொல்ற”
“ஆமாம் நீங்க எழுதிக்கொடுத்த ஒரு கடிதத்திலேயே என் வாழ்க்கை, இதோ இந்த சட்டையை போல் ஆகிவிட்டது”. இப்போது முகத்தில் செயற்கையான ஒரு சிரிப்பை வரவழைத்துக்கொண்டு அழுந்தச் சொன்னான்.
சட்டையை பார்த்தேன். சாயம் போய், சில இடங்களில் கை தையல் போட்டு, அவனுடைய வாழ்க்கை நிலையை காட்டியது.
அவன் எனக்கு யோசிப்பதற்கு நேரம் கொடுக்கவில்லை. சட்டென்று பேச்சை மாற்றி, “சரி...சரி...அதைப்பற்றி இப்போ எதற்கு. வா டீ சாப்பிடலாம்”. என்று கூறிவிட்டு, அருகிலிருந்த ஒரு டீ கடைக்கு அழைத்துச் சென்றான்.
“இரண்டு டீ போடுங்க” என்று சொல்லிவிட்டு,
“சரி உன்னைப்பற்றி சொல். இப்போ உன்னைப்பார்த்தால் எதோ ஆபீசர் ஆயிட்டேனு தோணுது. எங்க இருக்க?. எத்தனை பிள்ளைகள்?, மனைவி என்ன செய்கிறார்?” கேள்விகளாக அடுக்கினான்.
தான் சொன்ன அந்த வார்த்தைகளால் நான் வேதனைப்படுவேன் அல்லது கோபப்படுவேன் என்று நினைத்து, அதற்க்கு இடம் கொடுக்காமல் அந்த கேள்விகளை என்னிடம் கேட்ட மாதிரி தோன்றியது.
அவன் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவனுடைய பதிலுக்கு அர்த்தம தேடி என் சிந்தனை என்னை அந்த கல்லூரி நாட்களுக்கு தானாகவே இழுத்துச் சென்றது.

இன்று பல திரைப்பட இயக்குனர்கள் தங்கள் திரைப்படங்களில் கல்லூரி வாழ்க்கையையும், காதலையும் கலந்து உணர்வுகளுடன் படைக்க தேர்ந்தெடுத்த
1980 களிலான கல்லூரி காலம்!
அந்த கால கட்டத்தில் கல்லூரி வளாகத்தை சுத்தம் செய்யும் வகையில், பரந்த பெல்பாட்டம்(பெல்ஸ்), தடிமானான் பெல்ட், நீண்ட அகலமான காலர் மற்றும் பாக்கெட்க்கு பார்டர் வைத்து தைத்த சட்டை இவற்றுடன் ஒரே ஒரு நோட் புக் வைத்துக்கொண்டு திரியும் மாணவர்களில் நானும் ஒருவன். படித்தது இறுதியாண்டு ஆகையால் கூடவே ஒரு சீனியர் என்ற ஒரு தெனாவெட்டும் இருக்கும்.
மாணவிகளை பொருத்தவரை நான்கைந்து நோட்டு புத்தகங்கள் ஒரு டிபன் பாக்ஸ்சுடன். தாவணியின் முந்தானையை சேர்த்து இழுத்துபிடித்து, போர்த்தி மார்புடன் அனைத்து நளினமாக நடப்பார்கள். பெரும்பாலும் மாணவர்களை கண்டதும் கூடுதலான நளினம் தென்படும்.
மதுரையில் நான் படித்த கல்லூரி விடுதியின் அருகில் உள்ள மைதானத்தில் வாரத்தில் ஒருநாள் மட்டும் கூட்டம் மொய்க்கும். அன்று விடுதி ஸ்பெஷல் தயாரிப்பான பொங்கல் வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் நன்றாக இருக்கும். அதனாலேயே மாணவர்கள் மைதானத்தில் ஓடுவதும், கால்பந்து விளையாடுவதும், உயரம தாண்டுவதுமாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்ல அன்றைய பொங்கலை ஒரு பிடி பிடிப்பதற்காக.


நானும் என் அறை நண்பர்களும் வழக்கம் போலே உடற்பயிற்சி செய்து விட்டு அந்த மைதானத்தின் விடுதியை ஒட்டி இருந்த அந்த மரத்தடி திண்ணையில் உட்கார்ந்து உலக விசயங்களை அலசிக்கொண்டிருந்த அந்த பொன் மாலைப் பொழுதில்......
தங்கராசு எதிரில் வந்து நின்றான்!.
இந்த கதையில் ஆரம்பத்தில் நான் சந்தித்து, என்னை தர்ம சங்கட படுத்திய அதே தங்கராசு.
“என்ன தங்கராசு, எங்க காலேஜ்லயா சேர்ந்திருக்க!, எப்ப சேர்ந்த?
“நேத்துதான் சேர்ந்தேன்....”.
“என்ன மேஜர் எடுத்திருக்க?”
“ஆங்கில... இலக்கியம்ணே....” புதிய மாணவனுக்கான தயக்கம் பேச்சில் தெரிந்தது.
தங்கராசு எங்க ஊரை சேர்ந்தவன். என்னை போன்றே சாதாரண குடும்பத்தை சேர்ந்தவன். அதுமட்டுமில்லாமல் தூரத்து உறவை சேர்ந்தவன். அம்மா உறவுமுறைகளை விளக்கும் பொழுது எனக்கு ஒன்றும் புரியாது. இருந்தாலும் புரிந்த மாதிரி தலையாட்டி, நெருக்கமான உறவுகளை மட்டும் உறவுப்பெயர் சொல்லி அழைப்பேன்.
நண்பர்கள் தூரத்து உறவினர்கள் என்று பார்கமாட்டேன். குறைந்த வயது உடையவர்கள் தம்பி தங்கை என்றும், என்னைவிட வயது அதிகம் உள்ளவர்கள், அண்ணன், அக்கா என்றும் கூப்பிட்டு பழக்கமாகிவிட்டது.

எங்கள் ஊரில், பிளஸ் டூ முடித்து ரிசல்ட் எதிர்பார்த்து இருந்த தங்கராசு, ஒருமுறை நான் கல்லூரி விடுமுறைக்கு சென்றிருந்த பொழுது, நீங்க படிக்கிற கல்லூரியில்தான் சேரணும்னு எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்கேன் என்றான். தாராளமா எங்க கல்லூரியில் சேரு, ரொம்ப நல்ல கல்லூரி என்றிருந்தேன்.
அதன் பிறகு இன்றுதான் பார்கிறேன். நம்ம ஊர் பய இங்கு படிப்பது, நமக்கும் ஒரு உதவியா இருக்கும் என்று நினைத்தேன். ஒரு கிலோமீட்டர் தள்ளி இருந்த புதிய விடுதியில் தங்கியிருந்தான். நண்பர்களிடம் அறிமுகப்படுத்தினேன். நேரம் கிடைக்கும் பொழுதோ, உதவி தேவைப்பட்டாலோ என்னை வந்து பார் என்று, என் அறை எண்னை சொல்லி அனுப்பிவைத்தேன்.
அதன் பிறகு நூலக வாசலில் அடிக்கடி பார்ப்பேன். உள்ளே வரமாட்டான். நண்பர்களுக்காக காத்திருக்கிறேன் என்பான். புத்தகங்கள் படிப்பது நல்ல பழக்கம் உள்ளே வந்து படி என்பேன். பதிலேதும் சொல்லாமல் லேசாக சிரித்துவைப்பான்.
நாட்கள் நகர்ந்தன. தங்கராசு கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம் ஆகியிருக்கும். அன்று, நூலக வாசலில் வழக்கமாக நிற்கும் மரத்தடியில் நின்றிருந்தான். என்னை கண்டதும், எதிர்பார்த்திருந்ததுபோல் என்னை நோக்கி வேகமாக வந்தான். முகத்தில் வாட்டம் தெரிந்த்தது.
“என்ன தங்கராசு டல்லா இருக்க, ஏதாவது பிரச்சனையா” என்றேன்.
“அதெல்லாம் ஒண்ணுமில்ல அண்ணே. நீங்க எனக்கு ஒரு உதவி பண்ணனும்”
பய என்ன கேட்க போரானோ என என் எண்ணங்கள் ஓடின.
அவன் தயங்கியவாறு தொடர்ந்தான்.
“எனக்கு லிட்டரேச்சர் சரிப்பட்டு வராதுன்னு நினைக்கிறேன். ஒண்ணுமே புரிய மாட்டேங்குது” என்றான்.
“சரி இப்ப என்ன பண்ண போற?, இப்பொழுது போய் சொல்றியே? உங்க புரபசர்கிட்ட சொன்னாயா?”
“சொன்னேன். வேறு என்ன மேஜர் வேணும்னு எழுதிகொண்டுவா, அந்த புரபசரிடம் பேசி மாற்றி தருகிறேன் என்றார்”
“நல்லா யோசித்துதான் முடிவெடுத்தாயா?. நீயேதான் விரும்பி ஆங்கில இலக்கியம் எடுத்த! இப்ப போய் வேண்டாம் என்கிறாயே!. ஆங்கில இலக்கியம் ஆரம்பத்தில் கடினமாகத்தான் இருக்கும். போகப்போக எளிதாகவும், ஆர்வமாகவும் இருக்கும்!” என்றேன்.
“இல்லண்ணே... வேண்டாம்... கஷ்டமா இருக்கு” நான் சொல்வதை கேட்கும் மனநிலையில் அவன் இல்லை என்பது புரிந்தது.
“சரி உன் விருப்பம். நான் அதற்க்கு என்ன உதவி செய்யமுடியும்” என்றேன்.
“நீங்கதான் மேஜர் மாற்றிகேட்டு ஒரு லெட்டர் எழுதித் தர வேண்டும்”.
“சரி சாயங்காலம் என் அறைக்கு வா. எழுதித்தருகிறேன்”.
என் விடுதி அறையில் இருவர் ஆங்கில இலக்கியம் படிக்கிறார்கள். ஒருவன் காமெர்ஸ். நான் சயின்ஸ். எல்லோரும் மூன்றாமாண்டு மாணவர்கள்.
இதில் ஆங்கில இலக்கியம் படிக்கும் தர்மன் ரொம்ப ரசனையான பேர்வழி. ஷேக்ஸ்பியர் கதைகளை ரசனையுடன் சொல்லுவான். சில பாத்திரங்களுக்கு நடித்துக்காட்டுவான். சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் நகரத்திற்கு அவனோடு போவது ரொம்ப திரில்லாக இருக்கும். தனியாக கல்லூரி பெண்கள் போனால் போதும், அவர்கள் பின்னால் இயல்பாக சென்று,
“யு ஆர் எ தீப்” என நாடக வசனம்போல மென்மையாக சொல்லி நிறுத்தி அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்பான். பெரும்பாலும் திடுக்கிட்டு பார்ப்பார்கள் அவர்கள்!. உடனே
“U Stole my heart. I follow you to get it back” என ரவுசு விடுவான்.
அவர்கள் சிரித்துக்கொண்டே போய்விடுவார்கள். சிலர் லேசாக முறைத்தாலும் மேற்கொண்டு ஒன்றும் நடக்காது. இவன் கூடப்போய் என்று அடிவாங்கப்போகிறோமோ! என்ற கவலை எனக்கு எப்போதும் உடனிருக்கும். நல்லவேளையாக ஒருதடவைகூட அப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை. இருந்தாலும் அவன் செயல்கள் சிரிப்பாகவும், அவன் பேசுகிற ஆங்கில இலக்கியங்கள் ரசனையாகவும் இருப்பதால் அவனுடன் வெளியில் செல்வது பிடிக்கும்.
என்னுடைய கெமிஸ்ட்ரி புத்தகங்களைவிட அவனது ஆங்கில இலக்கிய புத்தகங்களையும், அவன் லிப்ரரியிலிருந்து எடுத்துவரும் புத்தகங்களையும் படிப்பதில் அதிக நேரம் செலவழிப்பேன்.
சொன்ன மாதிரியே தங்கராசு மாலை 6 மணிக்கெல்லாம் வந்துவிட்டான். ஆங்கில இலக்கிய மேஜரிலிருந்து விடுபட அவன் தீர்மானமாக எனக்கு தோன்றியதால், அவன் மனதை மாற்ற நான் மேற்கொண்டு முயற்சிசெய்ய விரும்பவில்லை.
“என்ன மேஜர் மாற்றி கேட்கனும். அதில் சீட் இருக்கா?” என்றேன்.
“ஹிஸ்டரி கேட்டு எழுதித்தாங்க. அங்க ஒரு சீட் காலியாக இருக்கிறது என்று கன்பர்ம் செய்து விட்டேன்” என்றான்.
ஒரு வெள்ளை பேப்பர் எடுத்து சரசரவென்று எழுதினேன். முடித்து அவனிடம் கொடுத்தபொழுது அதை படித்துக்கூட பார்க்காமல் அவன்
“தேங்க்ஸ்ணே புரபெசர்கிட்ட கொடுத்து விடுகிறேன். ரொம்ப தேங்க்ஸ்ணே” என்று மீண்டும் சொல்லி கிளம்பிய அவன் முகத்தில் ஒரு மகிழ்ச்சி கலந்த நிம்மதியை பார்க்க முடிந்தது!.

இடையில் வந்த தேர்வுகளினால், இந்த சம்பவத்தை நான் கிட்டத்தட்ட மறந்தேவிட்டேன். ஒரு இரண்டு வாரங்களுக்கு மேலிருக்கும் லைப்ரரி முன்னால், அதே மரத்தடியில் தங்கராசு நின்றுகொண்டிருந்தான். என்னை பார்த்ததும் வேகமாக ஓடோடி வந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி தெரியவில்லை. கவலை ரேகை படர்ந்திருந்தது.
“என்னாச்சு தங்கராசு? மேஜர் மாத்திட்டியா?”
“.......இல்லண்ணே!”
“ஏன்? நான் எழுதிக்கொடுத்த லெட்டரை உங்க புரபெசர்கிட்ட கொடுத்தியா?”
“ம்....கொடுத்தேன்.....”
“என்னாச்சு?”
“ஒன்னும் ஆகல. லிட்டரேச்சர்லதான் இருக்கேன்.”
எங்களுக்கிடையே நடந்த உரையாடல், திருவிளையாடல் தருமி-சிவபெருமான் உரையாடல் மாதிரி இருந்ததால், எனக்கு வந்த எரிச்சலை அடக்கிக்கொண்டு,
“என்னாச்சு? விவரமா சொல்லு” என்றேன்.
“நீங்க எழுதிக்கொடுத்த லெட்டரை எடுத்துக்கொண்டு புரபெசர் அறைக்கு போனேன். அவர் தனியா ரொம்ப ப்ரீயா இருந்தார். லெட்டரை வாங்கி வரி விடாம படிச்சார். பிறகு, என் முகத்தை பார்த்து இந்த லெட்டரை யார் எழுதினதுன்னு கேட்டார். நான்தான் என்று சொன்னேன். நீதான் எழுதினாயா என்று மீண்டும் அழுத்தமாக கேட்டார். நானும் உங்களிடம் எழுதிவாங்கினேன் என்று சொன்னால் திட்டுவார் என்று நினைத்து, வேறு யாரும் எழுதிக்கொடுத்து கொண்டு வருகிறேன் என்று நினைத்தீர்களா? எனக்கு என்ன எழுதத்தெரியாதா? நான்தான் சார் எழுதினேன் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூறினேன்.
“அப்புறம் என்னாச்சு? நீ சொன்னத நம்பிட்டாரா?”
“நம்பிட்டாரு...ஆனா...!”
“ஆனா என்னாச்சு?”
“அவர் நம்பினாலும், சரி தங்கராசு. நீ போய் லிட்டரேச்சர்லேயே கண்டினியு பண்ணு என்றார். எனக்கு தூக்கி வாரிபோட்டது. சார், எனக்கு லிட்டரேச்சர் சரியாய் வரல. அதனால் ஹிஸ்டரி கேட்டு எழுதிருக்கேன் என்றேன். உனக்கு லிட்டரேச்சர் வரலேன்னு யார் சொன்னது. இவ்வளவு அழகா, ஒரு தவறுகூட இல்லாமல் சிம்பிளா தெளிவா இந்த லெட்டரை எழுதியிருக்கே. உனக்கு லிட்டரேச்சர்தான் சரி போ. ‘விஷ் யு பெஸ்ட் ஆப் லக்’ என்றார். அப்புறம் தான் எனக்கு புரிந்தது. அந்த லெட்டரை யார் எழுதியது என்று ஏன் திரும்ப திரும்ப கேட்டார் என்று. அதற்க்கு மேல் உண்மையை மறைக்கக்கூடாது என்று, சாரி சார் இந்த லெட்டரை நான் எழுதல தேர்ட் இயர் படிக்கிற சீனியர்கிட்ட எழுதி வாங்கினேன் என்றேன். நான்தான் இரண்டு மூன்று தரம் கேட்டேன்ல, ஏன் அப்பா சொல்லல. இப்ப ஹிஸ்டரி கிடைக்கல என்பதற்காக போய் சொல்றியா? லிட்டரேச்சர் படிச்சா வேலை கிடைக்காதுன்னு யாரும் சொன்னார்களா? எவன் சொன்னான்?. கூப்பிடு அவனை. நான் பேசிக்கிறேன். நீ நல்லா மட்டும் படி உனக்கு வேலைக்கு நானாச்சு என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அதற்குமேல் என்னை பேச விடவில்லை. நான் வந்து விட்டேன்.
“முதல்லேய நீ உண்மையை சொல்லி இருக்கணும். திரும்ப திரும்ப நீ சொன்ன பொய் அவருக்கு உணமையாகிவிட்டது. அதனால்தான் நீ கடைசியாக சொன்ன உண்மை அவருக்கு பொய்யாகிவிட்டது. சரி இப்ப என்ன முடிவெடுத்திருக்க?” என்றேன்.
“இனி என்ன முடிவெடுக்கிறது?!, இதுதான் எனக்கு கெதி. ஆங்கில இலக்கியத்திலேயே தொடரப்போறேன்”
எனக்கு அதற்க்கு மேல் என்னசொல்வது என்று தெரியாமல், “லிட்டரேச்சர் ஒன்னும் கஷ்டமில்ல தங்கராசு, போக போக சரியாயிடும். நல்லா படிச்சா வெளிநாட்டுக்கெல்லாம் வேலைக்கு போகலாம்!” என்று சமாதானம் கூறினேன்.
அவன் ‘என் கஷ்டம எனக்கில்ல தெரியும்!’ என்பது போல நினைத்திருப்பான் போல, ஒன்றும் பதில் பேசாமல் அமைதியாக சென்றான்.


நான் டிகிரி முடித்து, மத்திய அரசு துறையில் பணியில் சேர்ந்தேன். வெவேறு ஊர்களில் பணியாற்றினேன். எப்போவாவது ஊருக்கு போனால் தங்கராசை பற்றி விசாரிப்பேன். படிச்சிகிட்டு இருப்பதாக சொல்வாங்க.
சில ஆண்டுகள் கடந்திருந்தன!
ஊருக்கு சென்றிருந்த பொழுது, தங்கராசு டிகிரியை முடிக்கவில்லை என்றும், சென்னையில் பலசரக்கு கடை வைத்திருப்பதாகவும் சொன்னார்கள். பிறகொருமுறை விசாரித்த போது கல்யாணம் ஆகி இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாகிவிட்டான், ரொம்ப சிரமபடுகிறான் என்றும் அவனுடைய நெருங்கிய நண்பர்கள் சொன்னார்கள்.
நான் கால வெள்ளத்தில் தத்தளித்து, காதோரம் நரைத்து, நடுத்தர வயதை தாண்டிய பின், சமீபத்தில் ஒருநாள் ஊருக்கு சென்றிருந்த பொழுதுதான், தெரியாத்தனமா நான் கேட்ட
“எப்படி இருக்க தங்கராசு?” என்ற என் கேள்விக்கு தங்கராசு சொன்ன பதில்தான் நீங்க ஆரம்பத்தில் படித்தது.
டீ வந்ததும் தெரியவில்லை, குடித்ததும் தெரியவில்லை!
“ரொம்ப கஷ்டப்பட்றேன். ஹிஸ்டரி கிடைத்திருந்தாலாவது, எதோ தட்டு தடுமாறி டிகிரி முடிச்சி ஏதாவது ஒரு வேலைக்கு போயிருப்பேன். ஆங்கில இலக்கியம் சுத்தமா வரல. நீங்க சொன்ன மாதிரி வெளிநாட்டுக்கெல்லாம் போகமுடியலனாலும் சென்னைக்கு போனேன் அங்க தாக்கு புடிச்சி தொழில் செய்ய முடியல அதனால அப்போவோட கடைய பார்த்துக்க இங்கேயே வந்துட்டேன். உங்க ஒரு கடிதத்தால என் வாழ்கையே ஒப்பேறிப் போச்சு” என்றான். வார்த்தைகளில் ஒரு ஏமாற்றம் நக்கல் தெரிந்தது.
அவனுக்கு என்ன பதில் சொல்லுவது என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் பொழுது,
மதுரை பேருந்து வந்தததால் அவனிடம் இருந்து விடை பெற்று பேருந்து ஏறினேன். இன்றுவரை அவனுடைய அந்த வார்த்தைகள் என் சிந்தனைக்கு வந்து அவ்வப்பொழுது என் மனதை அந்த கேள்வி உருத்திக்கொண்டிருக்கும்.
“தங்கராசு வாழ்கையை பாழாக்கியது நானா? அல்லது அவனா?