மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, October 02, 2023

Philosophical Quotes

 Philosophical Quotes 





Quote by Laozi


 Quote by Confucius




Quote by David Bohm


Quote by Guatama Buddha 



Quote by Pythagoras






Quote by Guatama Buddha

Monday, September 11, 2023

இன்று தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியின் நினைவு நாள் -11.09.2023

 இன்று தமிழ் அன்னையின் தவப்புதல்வன்   மகாகவி பாரதியின் நினைவு நாள்  -11.09.2023

-
.



                       
தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பை உயர்த்தி போற்றியவன் மகாகவி பாரதி .பிரம்மனின் தொழில் படைப்பு . அந்த படைப்பு தொழிலை இப் பூவுலகில் செய்பவர்கள் தொழிலாளிகளே எனச் சொல்லி அவற்றைப் பட்டியலிடுகிறான். 

"இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
இயந்திரங்கள் பல வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே

கடலில் மூழ்கி நல் முத்தெடுப்பீரே
அரும்பும் வேர்வை உதிர்த்து புவி மேல்
ஆயிரந் தொழில் செய்திடுவீரே"

                      இப்படி படைப்பு தொழிலில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களுக்கு  எல்லாப் புகழும் சேரட்டும் என்பதை 

"பெரும் புகழ் நுமக்கே இசைக்கிறேன்,
பிரம தேவன் கலை இங்கு நீரே !" 

என தொழிலாளர்களை நோக்கி கவி பாடுகிறான்.

                     விவசாயம் செய்து எங்களுக்கு உணவு , காய்கறி தருகிறீர்கள். எண்ணெய், பால், நெய் என எல்லாம் தருகிறீர்கள் . மரங்கள் அறுத்து எங்களுக்கு வீடு கட்டி தருகிறீர்கள் . நெசவு நூற்று ஆடை தருகிறீர்கள். எனவே நீங்கள் இந்த பூமியில் எங்களை காப்பவர்கள் என பாரதி சொல்வதை அவனது கவிதை வரிகளில் படியுங்கள்.

மண்ணெடுத்து குடங்கள் செய்வீரே
மரத்தை வெட்டி மனை செய்குவீரே
உண்ணக் காய்கறி தந்திடுவீரே
உழுது நன்செய் பயிரிடுவீரே
எண்ணெய் பால் நெய் கொணர்ந்திடுவீரே
இழையை நூற்று நல்லாடை செய்திடுவீரே
.
"விண்ணின் இன்றெமை வானவர் காப்பர்
மேவிப் பார்மிசை காப்பவர் நீரே "

                     அது மட்டுமா .தொழிலாளர்களே! நாட்டில் அறத்தை நிலை நாட்டுபவர்களும் , மக்களுக்கு இன்பத்தையும் மகிழ்ச்சியும் தருபவர்களும் நீங்களே . எனவே சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் "எங்களது கண்ணுக்கு முன்னால் தெரியும் தெய்வங்கள் நீங்கள் தான் " .என பாரதி குதூகலிக்கிறான் .


நாட்டில் அறம் கூட்டி வைப்பீரே .
நாடும் இன்பங்கள் ஊட்டி வைப்பீரே

தேட்டமின்றி விழி எதிர் காணும்
தெய்வமாக விளங்குவீர் நீரே

                         இந்த பாரத தேசம் உயர வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் என பாரதி சொல்வதைப் படியுங்கள் .

பட்டில் ஆடையும் பஞ்சில் உடையும்
பண்ணி மலைகளென குவிப்போம்
ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம்
குடைகள் செய்வோம் உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம் இரும்பாணிகள் செய்வோம்

                       அது மட்டுமா . "உலகத் தொழில்கள் அனைத்தும் உவந்து செய்வோம்" என இந்தியத் தொழிலாளர்களுக்கு அறைகூவல் விடுகிறார் .

                        இரஷியாவில் மாமேதை லெனின் தலைமையில் புரட்சி நடந்து தொழிலாளர் வர்க்கம் ஆட்சிக்கு வந்ததை வரவேற்று பாடிய மகாகவி பாரதி

"குடிமக்கள் சொன்னபடி குடி வாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றில் எழுந்தது பார் குடியரசென்று
உலகறியக் கூறிவிட்டார் ".

                       என்று ஆனந்த கூத்தாடுகிறான்.பாரதி தனி   ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடச் சொன்ன ஆவேசத் தீப்பந்தம் அல்லவா . எனவே .கொடுமை கண்டு கொதிநிலை அடைந்த அவன் .வறுமை ஏழ்மை அற்ற உலகைக் காணத் துடித்துக்கொண்டிருந்தான்.எனவேதான் "ஆகா என்று எழுந்தது பார் யுகப் புரட்சி" என ரசியப் புரட்சியை உச்சி முகர்ந்து பாடுகிறான். ."உலகத்துக்கு ஓர் புதுமை" என அப்புரட்சியைப் பறை சாற்றுகிறான். பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது
"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"
என்கிறான்..உலகம் முழுதும் அப்புரட்சி பரவ ஏங்கி தவிக்கிகிறான். தொழிலாளர் தலைமையிலான ஆட்சியில் தான்எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் என தீர்க்கமாக நம்புகிறான்

                       1600 களில் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த கிழக்கு இந்தியக் கம்பெனி நம்மை வெள்ளையகளின் அடிமையாக்கியது வரலாற்று உண்மை. ஆனால் இன்று என்ன நடக்கிறதுஇப்போது உள்நாட்டு வெளிநாட்டு  கம்பனிகளுக்கு எல்லா சலுகைகளையும் வாரி வாரி வழங்கி  வெண்சாமரம் வீசி வரவேற்கிறது. காக்க இராணுவத்தையும் மேய்க்க போலீசையும் மட்டும் தன்னிடம் வைத்துக்கொண்டு  மற்ற எல்லாவற்றையும் அதானியிடமும் அம்பானியிடமும் தரத் துடிக்கிறது இப்போதைய மோடி அரசு .    மத்திய அரசு  தொழிலாளர்கள், விவசாயிகள் , நெசவாளிகள், அடித்தட்டு சிறு வியாபாரிகள் வேலை இழப்பது பற்றியோ அரசு கவலை படவில்லை . பெரு முதலாளிகள் ( CORPORATES) நலனை மட்டுமே பாதுகாக்கும் அரசாக இருக்கிறது அது. . ஏழை எளிய மக்களின் நலன் குறித்த அக்கறை அதற்கு ஏதுமில்லை .  தனது வாக்கு வங்கி அரசியலுக்காக  மக்களிடையே மத/ இன  வெறி ஊட்டி அவர்களை மோதவுட்டு வேடிக்கை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு  ஏற்கெனவே அரசியல் ரீதியாக பிளவுண்டு கிடக்கும் தொழிலாளர்களின் வர்க்க உணர்வவை முழுமையாக மழுங்கடிக்க எல்லாவித வேலைகளையும் செய்து வருகிறது . இந்திய தொழிலாளிவர்க்கம்  ஏற்கனவே போராடிப் பெற்ற 44 தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களை தொழிலாளர்களின்  உரிமைகளை பறிக்கும் நோக்கிலும் பெரு முதலாளிகளுக்கு கூடுதலாக அதிகாரம் தரும் நோக்கிலும்  நான்கு சட்டத் தொகுப்புகளாக சுருக்கி  உள்ளது மோடி தலைமையிலான  மத்திய அரசு .


 .எனவே பாரதி கண்ட கனவுலகம் படைத்திட " சிலர் கொழுக்க வைத்து  , பலரை வாடவைக்கும்  மத்திய அரசின்  பிற்போக்கான பொருளாதரக் கொள்கைகளையும் , மக்களை  பிளவு படுத்தும் மதவாத கொள்கைகளையும்  எதிர்த்துப் போராட வர்க்க ஒற்றுமையுடன் கூடிய ஒற்றுமை நமக்கு மிக அவசியம்.  

"ஒற்றுமை வழி ஒன்றே வழியென்பது ஓர்ந்திட்டோம் நன்கு - தேர்ந்திட்டோம் . மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக் கெல்லாம் மலைவுறோம் சித்தம் கலைவுறோம்" என்ற பாரதியின் வரிகளை போர் பரணியாகப் பாடுவோம்.


“பாரதி பிடித்த தேர்வடம் நடு
வீதி கிடக்கிறது- அதைப்
பற்றிப்பிடித்து இழுப்பதற்கு ஊர்
கூடித் தவிக்கிறது!

நம்பிக்கை வைத்து நெம்புகோல் எடுத்து
நடப்போம் வாருங்கள் - நாம்
நடந்தால்  தேர் நடக்கும் - அன்றேல்
வெய்யில்  மழையில் கிடக்கும்"

                           என்ற பரிணாமன் கவதையை மகாகவி பாரதியாரின் நினைவு நாளில் நினைவு கூர்வோம். அவன் பிடித்து விட்டு சென்ற தேர் இழுப்போம் வாருங்கள் தோழர்களே.

குறிப்பு:
இந்து மத புராணங்களும், சாஸ்திரங்களும் காலத்தை யுகமாக பிரித்துள்ளனர்.
கிருத யுகம் - அறம், உண்மை நிறைந்த யுகம். வறுமையில்லை, துயரமில்லை.எங்கும் மகிழ்ச்சி தவழும் யுகம். இந்த யுகத்தில்அறக்கடவுளுக்கு நான்கு கால்கள் உண்டு. அரிச்சந்திரன் இந்த யுகத்தில் பிறந்ததாக சொல்லப்படுவதுண்டு.
எனவேதான் பாரதி இரஷியப் புரட்சியை பற்றி குறிப்பிடும்போது

"இடிபட்ட சுவர்போலே கலி விழுந்தான்
கிருத யுகம் எழுக மாதோ"

என்கிறான். இரஷியப் புரட்சி மூலம் மக்களுக்கு கிருத யுகம் வந்துவிட்டதாக பழமையோடு புதுமையைப் பொருத்துகிறான்
திரேதா யுகம் - அறக்கடவுள் தன் ஒரு காலை இழந்து மூன்று கால்களுடன் இருப்பார் .இராமன் அவதாரம் செய்ததது இந்த யுகத்தில் தான்
துவாபர யுகம்--அறக்கடவுள் தன் இரு கால்களை இழந்து இரண்டு கால்களுடன் இருப்பார் .மஹாபாரதம் நடந்தது இந்த யுகத்தில் தான்
கலியுகம்--அறக்கடவுள் தன் மூன்று கால்களை இழந்து ஒரு காலுடன் இருப்பார்

Tuesday, February 21, 2023

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) தமிழர் தம் கடமையும்

 

உலகத் தாய் மொழி தினமும் (21.02.2023 ) 

தமிழர் தம் கடமையும்



சர்வதேச தாய் மொழி நாளின்  வரலாறு            

  1947 ல் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரமடைந்தன . அப்போது பாகிஸ்தான் நாடு  மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் ( இன்றைய பங்களாதேஷ்) என இரண்டு பகுதிகாளாக இருந்தது . உருதுமொழியே பாகிஸ்தானின் தேசிய மொழி என்று அன்றைய ஒன்றுபட்ட பாகிஸ்தான் அரசு அறிவித்த போது   வங்காள  மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பெரும்பான்மை கிழக்கு பாகிஸ்தான் மக்கள் அதைக் கடுமையாக எதிர்த்து போராடினர் . போராட்டம் கிழக்கு பாகிஸ்தான் முழுதும் பரவியது .21.02.1952 அன்று டாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பிரமாண்டப் பேரணியை கலைக்க காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியது .அதில்  அப்துல் சலாம் , அப்துல் பர்கத் ,ரபீக் உதின் அஹமது, அப்துல் ஜபார், ஷபியூர் ரஹ்மான்  என்ற ஐந்து மாணவர்கள்   மரணமடைந்தனர் . தங்களது தாய் மொழியின் உரிமைக்காக இன்னுயிர் ஈந்த இந்த மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் உலகத் தாய் மொழி தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ(UNESCO)  அமைப்பு  விடுத்த அறைகூவல் படி உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 தேதியன்று  சர்வதேச தாய் மொழி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது

 என் மொழி தமிழ்! நான் தமிழன்!!

 நம் மொழி தமிழ் மொழி .தமிழர் என்பது நம் அடையாளம். தமிழ் உலகின் மூத்த மொழி. இலக்கிய இன்பத்தை வாரி வாரி வழங்கும் வள்ளல் மொழி .உயிருக்கு நேரான மொழி இது .”யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றான் பாரதி.

 வாழிய செந்தமிழ் ;வாழிய நற்றமிழர் ;வாழிய பாரத மணித்திருநாடு என்று பாரதி வரிசை படுத்தி அடுக்குவதன் அர்த்தமே தேசியம் என்பது  நாம்  கடைசியாக வைத்துக்கொள்ள வேண்டிய அடையாளம். எனவே என் மொழி தமிழ் , நான் தமிழன். அதன்பின்னரே மற்றேல்லாம்  என்ற கோட்பாட்டை   ஒவ்வொரு தமிழரும் உயிர் மூச்சென கொள்ள வேண்டும் .

  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்றால் என்ன ? 

மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு .குருசேத்திரப் போர் முடிவுக்கு வந்தது . கௌரவர்கள் கொல்லப்பட்டனர் . வெற்றி பெற்ற பாண்டவர்கள் ஆட்சிபீடம் அமரப் போகிறார்கள் . கௌரவர்களின் தந்தை திருதராஷ்டிரன் பார்வையற்றவர் . அப்போது  அங்கு அமர்ந்து  இருக்கிறார். தனக்கு பிரியமான மகன் துரியோதனனைக்  கொன்ற பீமன் மீது அவருக்குள்ளே  கடுங்கோபம்; வெறுப்பு. திருதராஷ்டிரன் ஒரு வரம் பெற்றவர் . அவர் யாரை வெறுப்புடன் ஆரக்கட்டி தழுவிக் கொள்கிறாரோ அவர் அப்பளமாக நொறுங்கிப் போவார்..அதற்கு  திருதராஷ்டிர ஆலிங்கனம் என்று பெயர்.

 இதை நன்கு அறிந்தவன்  கிருஷ்ணன். பாண்டவர்களில் ஒவ்வொருவராக திருதராஷ்டிரனிடம் அறிமுகம் செய்து ஆசி பெறவைத்த கிருஷ்ணன் , பீமனின் முறை வந்த போது , பீமன் போல் செய்யப்பட்ட ஒரு சிலையை திருதராஷ்டிரன்  முன் தள்ளிவிட்டதாகவும் , அவர் பீமன் என நினைத்து அச்சிலையை கட்டித் தழுவியதாகவும் அதன் மூலம் பீமன் கிருஷ்ணனால் காப்பற்றப்பட்டான் என்றும் மகாபாரதம் சொல்கிறது .

உலக மகா நடிப்பை  புரிந்துகொள்வோம் 

 மத்தியில் ஆளுகின்ற பிஜேபி அரசு ஒரேநாடு ;ஒரே மொழி; ஒரே பண்பாடு என்ற கொள்கையை முன்னிறுத்தி வருவது யாவரும் அறிந்த ஒன்று .  அது இந்தியா முழுவதும் ஆட்சி மொழியாகக்   கொண்டுவர விரும்பும் ஹிந்தி மொழித் திணிப்பை கடுமையாக  எதிர்க்கும் தமிழர்கள் மீதும் தமிழ் மீதும்  உள்ளுக்குள்ளே வெறுப்பு இருந்தாலும் , தமிழ் மீது அதிகக் காதல் கொண்டது போல் நடிக்கிறது . காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறது . பிரதமர் உலகில் மூத்த மொழி தமிழ் மொழி என்கிறார்; தமிழர்களை கவருவதாக நினைத்து தமிழில் பேசியும்  திருக்குறளையும் பாரதியின் கவிதைகளையும் சொல்லியும்  தமிழ்க்கொலை செய்கிறார். 

இவர்கள் நடிப்பில் ஏமாறாமல் உஷாராக இருப்போம் :

இவை போன்று  தமிழ் மீதும் தமிழர்கள் மீதும் காட்டும் கரிசனமும்  “திருதராஷ்டிர ஆலிங்கனத்துக்கான” முன்னோட்டமே என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொள்ளவேண்டும்.  இவர்களது நடிப்பில் மயங்கி ஏமாந்து விடாமல் உஷாராக இருப்போம் என ஒவ்வொரு தமிழரும் இந்த உலகத் தாய் மொழி தினத்தன்று சபதமேற்ப்போம். என் மொழி! என் பண்பாடு!! என உரக்க சொல்வோம். அதை எந்நாளும் காக்க இந்நாளில் உறுதி ஏற்ப்போம்  

 ...பி.சேர்முக பாண்டியன்         

       

Sunday, December 11, 2022

மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

                          மகாகவி பாரதியின் பார்வையில் மதங்கள்

மகாகவி பாரதி மத ஒற்றுமையை உயர்த்திப் பிடித்தவன். மத பேதங்களை அடியோடு வெறுப்பவன் . எல்லா மதங்களையும் சமமாக பாவிக்கும் சர்வ சமய சமரசக் கொள்கையை நேசிப்பவன் . எல்லா தெய்வங்கள் மீதும்  கவிதைகள் செய்து களிப்புற்றவன் . ஆனாலும் அவனுடைய கவிதைகளிலும் கட்டுரை தொகுப்புகளிலும் மதம் குறித்த பார்வையில் தெளிவிருந்தது .

 

 “உலகம் முழுதுக்கும் தெய்வம் ஒன்றே . அதுவே எல்லா மதங்களுக்கும் பொதுவான இறைவனாக வியாபித்திருக்கிறது  . அதுவே  பரம்பொருள் ஆகும். எனவே மத ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் . பெண்ணடிமைத்தனம் மண்மூடிப் போகவேண்டும்” என்ற  மகாகவியின் மதங்கள் குறித்த பார்வை  ஆர்.எஸ்.எஸ் அமைப்பின்   அதன் அரசியல் கரமான பிஜேபி கட்சியின் மதவாத கொள்கைக்கு நேர் எதிரானது  . ஆனால் அந்த அமைப்புகள்  மகாகவியை ஹிந்துக் கவிஞன் என்று  கொண்டாடுகின்றன .அவனது பிறந்த நாளை பிராந்திய மொழிகளுக்கான உற்சவ நாளாக உயர்  கல்வி நிறுவனங்களில் கொண்டாடப்போவதாக   சொல்கின்றன. இது மிகப் பெரிய நகை முரண்.   

 

ஆர்.எஸ்.எஸ்க்கும் , பிஜேபிக்கும் சுட்டிக்காட்டும் அளவில் சுதந்திர  போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர்களோ , ஆளுமை மிக்க பிரபலமான அரசியல் தலைவர்களோ , கவிஞர்களோ இல்லை என்பது எல்லோரும் அறிந்த உண்மை . அதற்கான பஞ்சத்தை ஈடுகட்ட மக்கள் மத்தியில் பிரபலமான அரசியல் தலைவர்களையும், சமூக போராளிகளையும், கவிஞர்களையும் தம்மவர்களாக காட்டிக்கொள்ள சகலவித பித்தலாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் . அவர்களை தங்களவர்களாக காட்ட  பொய்க் கதைகளையும் புனைசுருட்டுக்களையும் அவிழ்த்து விடுகின்றனர் .

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை தங்களது தலைவராக காட்ட அவருக்கு குஜராத் நர்மதை நதிக்கரையில்  600 அடி உயரத்தில்  3000 கொடி ரூபாய் செலவில் வெங்கலச்சிலை எழுப்பியுள்ளனர். சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேருவுக்கு பதிலாக சர்தார் வல்லபபாய் பட்டேல் வந்திருந்தால்  நாடு எப்பவோ வளர்ச்சி பெற்ற நாடாக ஆகியிருக்கும் என புருடா விடுகின்றனர் . நேருவுக்கு நேர் எதிராக அவரை நிறுத்துகின்றனர் .பட்டேல் முதல் உள்துறை அமைச்சராக இருந்தபோது தான் ஆர்.எஸ்.எஸ் மதவாத பிளவுவாத ஆபத்தான அமைப்பு என்பதை காரணம் காட்டி அதை அவர் தடை செய்தார் என்பதை  வசதியாக மறைத்து அவரை தங்களது ஆளாக காட்டிவது மிகவும்கேலிக்கூத்தானது .

 

சட்டமேதை பாபா சாஹிப் அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸின் பிற்போக்கு கொள்கைகளை அம்பலப்படுத்தி அதன் சுய ரூபத்தை தோலுரித்துக் காட்டியவர் . இந்துமதத்தின் சாதிய  கட்டமைப்பினை வெறுத்து ஒதுக்கிய அவர் மனம் வெறுத்துப்போய்  புத்த மதத்தை தழுவியவர் . சமீப காலமாக அம்பேத்கர் ஒரு  இந்து தான் என்று பொய்யை பரப்புகின்றனர் . தமிழகத்தில் அவரது சிலைகளுக்கு காவி ஆடை அணிவிப்பதையும், குங்குமப் போட்டு வைப்பதையும் முன்னெடுத்து வருகின்றனர். இசைஞானி இளையராஜா போன்ற பிரபலங்களை வைத்து மோடி ஆட்சியில் அமலாக்கப்படும் திட்டங்களை கண்டால் அம்பேத்காரே பெருமை அடைவார் என்று சொல்ல வைக்கின்றனர் .

 

எல்லா உயிர்க்கும் பிறப்பொக்கும் என்று சொன்னது மட்டுமின்றி எந்த ஒரு இடத்திலும் மதச் சாயலுக்கு இடமளிக்காமல் திருக்குறளை எழுதியவர்  திருவள்ளுவர்  . ஆனால் அவர் ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்று சொல்லி தமிழகத்திலுள்ள சங் பரிவார் அமைப்புகள் அவரது சிலைகளுக்கு   காவி ஆடை அணிவிப்பதும், நெற்றியில் திருநீறு பூசுவதும் என அபத்தத்தை வேண்டுமென்றே செய்து வருகின்றனர்.

 

சர்தார் வல்லபபாய் பட்டேலை , அம்பேத்கரை , திருவள்ளுவரை தம்மவர்களாக காட்டிக் கொள்ள முயலும் சங் பரிவாரின் மதவெறி போக்கிரிகள் தோல்வி அடைந்து வருவது போல மகாகவி பாரதியை அவர்களது கவிஞராக காட்டிக் கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடியும் . உண்மையை  ஒளிரச் செய்யும்  பாரதியின் கவிதைகள் , கட்டுரைகள் முன்னே இவர்களது பொய்களும் , போலித்தனங்களும் எரிந்து சாம்பலாக பொசுங்கிப் போய்விடும்.

 

மதம் குறித்து பாரதியின் பார்வையும் கருத்தும் என்ன என்பதை  அவனது எழுத்துக்கள் மூலமே நாம் பார்ப்போம் .

 

“ஜாதி மதங்களைப் பாரோம்- உயர் 

ஜன்மம் இத்தேசத்தில் எய்தினராயின் 

வேதியராயினும் ஒன்றே- அன்றி 

 வேறு குலத்தினராயினும் ஒன்றே”

 

என்கிறான் பாரதி.

 

ஜாதி மதங்களைப் பார்க்காமல் , பிராமணர்களையும், இதர சாதியினரையும் இரே தட்டில் வைத்து பார்க்கிறான் மகாகவி. சாதி மத பேதங்களை தீமூட்டி வளர்ப்பதன் மூலம் தனது ஓட்டு வங்கியை விரிவுபடுத்த முடியும்  என்ற முனைப்பில் செயல்படுகின்ற , ஜாதிய   மேலாதிக்கத்தை நிலை நிறுத்த முயலும் ஆர்.எஸ்.எஸ, மற்றும் பரிவார  அமைப்புகள்   ஜாதி மத பேதங்களை வெறுத்தொதுக்கும் பாரதியை கொண்டாடாடுவதும் விழா எடுப்பதும்  சாத்தான்கள் மகான்கள்  போல் வேடமணிந்து அறம் பேசுவதற்கு ஒப்பானதாகும்.

 

“என் தாய் கண்ணன் . அவள்  நான் வேடிக்கை பார்த்து நகைத்திட எதையெல்லாம்   உருவாக்கி இருக்கிறாள் என உங்களுக்கு  தெரியுமா”?  என்ற கேள்வியை நம்மிடம் கேட்டுவிட்டு அதற்கான   பதிலை “கண்ணன் –என் தாய்” என்ற கீழ்க்கண்ட கவிதையில் பாரதி சொல்கிறான்.

 

“நான் வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற்கே
கோத்தபொய் வேதங்களும்-மதக்
கொலைகளும் அரசர்தம் கூத்துக்களும்
மூத்தவர் பொய்ந்நடையும்-இள
மூடர்தம் கவலையும் அவள் புனைந்தாள்”

 

 நான் வேடிக்கை பார்த்து சிரிக்க என் தாய் கண்ணன்   உண்டாக்கியவையே “புனையப்பட்ட போலி வேதங்கள், மதத்தின் பேரால் நடக்கும் படுகொலைகள், மன்னர்களின் அபத்தமான செயல்கள் , மூத்தவர்களின் போலியான பழக்க வழக்கங்கள் , அறிவற்ற இளைஞர்களின் கவலைகள்”போன்றவை என்கிறான் பாரதி .

 

மேலும் “வேல்ஸ் இளவரசருக்கு வரவேற்பு” என்ற தலைப்பிலான தனது கவிதையில் சொல்வதைப் பாருங்கள்

 

“கொடுமதப் பாவிகள் குறும்பெலாம் அகன்றன.
யாற்றினிற் பெண்களை எறிவதூஉம்,இரதத்
துருளையிற் பாலரை உயிருடன் மாய்த்தலும்,
பெண்டிரைக் கணவர்தம் பிணத்துடன் எரித்தலும்”  


   கணவர் இறந்ததும் மனைவியை எரித்து சதி போன்ற இன்ன பிற இந்து மதத்தில் உள்ள பிற்போக்கு செயல்களில் ஈடுபடுபவர்களை கொடுமதப்பாவிகள் என்கிறான் . அவர்கள் மீது பாரதி காட்டும் வெறுப்பை இப்பாடலின் மூலம் உணரலாம்.

 

மகாகவி ஹிந்து மதத்திலுள்ள தெய்வங்களை மட்டும் பாடியவன் அல்ல.கிறித்துவ மதத்தின் தேவ தூதர் ஏசுவையும் ,இஸ்லாம் மதம் காட்டும் இறைவன் அல்லாவையும் பாடிக்களித்தவன்.சிலுவையில் அடிக்கப்பட்டு மாண்ட ஏசுபிரான் மூன்றாவது நாளில்உயிர் பெற்று எழுந்ததை “யேசு கிறிஸ்து” என்ற கவிதையில் இப்படி சொல்கிறான் பாரதி.

 

“ஈசன் வந்துசி லுவையில் மாண்டான்,
எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;

தேசத்தீர்! இதன் உட்பொருள் கேளீர்;
தேவர் வந்து நமக்குட் புகுந்தே


நாசமின்றி  நமை நித்தங் காப்பார்;
நம் அகந்தையை நாம் கொன்று விட்டால்”  

 

  என் தேசத்து மக்களே!, இயேசு சிலுவையில் அறையப்பட்டு இறந்த மூன்றாம் நாளில் உயிர் பெற்று வந்ததன் உட்கருத்து எது எனத் தெரியுமா? நமது ஆணவத்தை ஒழித்துவிட்டால் தெய்வம் நமக்குள்ளே புகுந்து எவ்வித தீங்கும் இன்றி நம்மை காக்கும் என்பதே என்கிறான் பாரதி .

 

 அல்லாவைப் பற்றி சொல்லும் போது சொல்லாலும் மனதாலும் தொடவொணா ஜோதி என்கிறான் அவன் .மேலும்  அல்லாவையும் , யெகோவாவையும்( தேவனையும்)  அவர்களது  நாமத்தை போற்றுபவர்களின் திருவடிகளையும் பேணவேண்டும் என்று தனது சுயசரிதையில் சர்வ மத சமரசம் என்ற தலைப்பிலான கவிதை வரிகளில் அவன் சொல்கிறான்.  

 

“பேருயர்ந்த யேஹேவா அல்லா நாமம்
பேணுமவர் பதமலரும் பேணல் வேண்டும்”

 

பாரதி தனது  முரசு பாடலில் மதத்தின் பெயரால் சண்டைகள் வேண்டாம் என்பதை கீழ்க்கண்டவாறு வலியுறுத்துகிறான்   

 

தீயினைக் கும்பிடும் பார்ப்பார்,-நித்தம்
திககை வணங்கும் துருக்கர்,
கோயிற் சிலுவையின் முன்னே-நின்று
கும்பிடும் யேசு மதத்தார்:

யாரும் பணிந்திடும் தெய்வம்-பொருள்
யாவினும் நின்றிடும் தெவ்ம்,
பாருக்குள்ளே தெய்வம் ஒன்று;-இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்.

 

உலகில் தெய்வம் ஒன்றே.அது எல்லாப் பொருள்களிலும்  வியாப்பித்திருக்கிறது. அதையே நாம் அனைவரும் வணங்குகிறோம் எனவே  .மதச் சண்டைகள் வேண்டாம் என்கிறான் பாரதி

புதிய ஆத்திசூடியில் கடவுள் வாழ்த்து என்ற மரபை பயன்படுத்தும் பாரதி அதை “பரம் பொருள் வாழ்த்து” என புதுமை செய்து எழுதிய கவிதை அற்புதமானது

 

“சைவத்தின் சிவன் ,வைணவத்தின் திருமால் ,இஸ்லாத்தின் அல்லா ,கிறிஸ்தவத்தின் தேவன்  எல்லோரும் ஒன்றே . அவர்கள் அனைவரும் இறைவனைக் குறிக்கும் பரம் பொருளின் பல ரூபங்கள் .ஒளி வீசும் அறிவே அப்பரம் பொருளின் இயல்பு . எனவே மத வேற்றுமை பார்ப்பது அர்த்தமற்றது . மதங்கள் வெவ்வேறாயினும் பரம்பொருளாகிய இறைவன் ஒன்றே. அந்த இறைவனை ஒவ்வொருவரும் அவரவர் மதப்படி வணங்குகிறார்கள் .எனவே மத சச்சரவு அனாவசியமானது” என மத ஒற்றுமை பேணுவதன் அவசியத்தை தனது புதிய ஆத்தி சூடியை  படிக்க துவங்கும் முன்பே வலியுறுத்துகிறான் ..புதிய ஆத்திசூடியின் முதலில்  வரும் பரம் பொருள் வாழ்த்தை படித்தால் பாரதியின் மதம் குறித்த பார்வையை நாம் காணமுடிகிறது.  

 

ஆத்தி சூடி.இளம்பிறை யணிந்து
மோனத் திருக்கும் முழுவெண் மேனியான்;
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்;
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்;
ஏசுவின் தந்தை எனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உயர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே:அதனியல் ஒளியுறும் அறிவாம்

 

சுப்பராம  தீட்சிதர் பாரதியின் ஊரான எட்டையாபுரத்தை சேர்ந்தவர் . கர்னாடக இசையில் வல்லுநர்.கர்னாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதரின் இசைப்பணி குறித்து சங்கீத சம்பிரதாய பிரதர்ஷினி என்ற நூலை எழுதியவர். அவரை மறைவையொட்டி எழுதிய கவிதையில்

 

“மன்னரையும் பொய்ஞ்ஞான மதக்குரவர்
தங்களையும் வணங்கலாதேன்
தன்னனைய புகழுடையாய்!நினைக்கண்ட
பொழுதுதலை தாழ்ந்து வந்தேன்”

 

என்கிறான். அரசர்களையும், பொய்யான அறிவினையுடைய மதப் பெரியவர்களையும் வணங்காத நான் , உங்களை கண்டதும் தலை சாய்த்து மரியாதை செலுத்தினேன் என்று  சொல்லும் இந்த கவிதையின் மூலம் மதங்கள் குறித்த பாரதியின் உள்ள வெளிப்பாடு தெளிவாக தெரிகிறது.

 

 பழைய பொய்ச்சிலைகளை  வணங்குவதை ஒழித்து எங்கும் வியாப்பித்திருக்கும் பிரமத்தை தொழவேண்டும் என்று முமது நபிகள் ஒரு புதிய மதத்தை உண்டாக்கினார்”  என்று  “காமதேனு- முகமது நபி” என்ற கட்டுரையில் குறிப்பிடுகிறான் பாரதி. எல்லா மதத்தின் தெய்வங்களையும் பிரம்மம் என்ற பரம்பொருளாக பார்க்க பழகியவன்  மாகாகவி என்ற கருத்துக்கு இது வலு சேர்க்கிறது .

 

மதம் குறித்த பாரதியின் பார்வை தெளிவானது . உலகில் உள்ளது ஒரே தெய்வம். அது எல்லா மதங்களிலும் பல்வேறு பேர்களில் வியாபித்திருக்கிறது .எனவே  சர்வ மத சமரசம் உலகில் நிலவ வேண்டும். மத சச்சரவுகள் , மத மோதல்கள் , போன்றவை அர்த்தமற்றவை. என்ற கருத்துக்களை  தனது கவிதைகளிலும், கட்டுரைகளிலும் பல்வேறு வடிவில் வலியுறுத்தி வருகிறான் .

 

மதங்கள் குறித்து பிற்போக்கான பார்வையை உடைய  வலதுசாரி அமைப்புகள்  பாரதியை வெறுக்கவே செய்வார்கள்   ஆனால் அவர்கள் பாரதியை போற்றுவதும் அவனை   தங்களது கவிஞனாக அடையாளம் காட்ட நடத்தும் கூத்துகளும்  உலக மகா நடிப்பு. என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . மதம் குறித்த பாரதியின் சிந்தனைகளை இளைஞர்களிடம் எடுத்து செல்வதும், சங்பரிவார் அமைப்புகளின்  உள்நோக்கத்தை அம்பலப்படுத்துவதும், தமிழ் சமூகம் அவர்களை புறந்தள்ள வைக்க செய்வதும்  நம்முன்னுள்ள  கடமையாகும்.

 

மாதர்- தமிழ்நாட்டின் விழிப்பு என்ற கட்டுரையில் “உலகிலுள்ள மத பேதங்களை எல்லாம்  வேருடன் களைந்து சர்வ சமய சமரச கொள்கையை நிலை நாட்ட வேண்டுமென்றால் அதற்கு தமிழ்நாடே சரியான களம்” என்று தீர்க்கமாக தமிழ் மக்களை கணித்தவன்  பாரதி. அவனின்  வழி நடப்போம் . தமிழர்களிடையே   மத வெறியை தூண்டும் சக்திகளை அடையாளம் கண்டு அவற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறிவோம்.

 

பி.சேர்முக பாண்டியன் ,மதுரை